திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள கடியாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வனிதா (வயது 38). இவர் திருச்சி ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். பாலசுப்பிரமணியனின் குடும்பத்துக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் அவரது அத்தை பட்டு (58) என்பவரது குடும்பத்துக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி வனிதா குடும்பத்தினரிடம் பட்டு என்பவர் தன்னுடைய மகன் திருமணத்திற்காக ரூ.50 ஆயிரம் வாங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாகவும் அவர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று பட்டுவை வனிதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பட்டு தனது மகன்களிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பட்டுவின் மகன்களான பிரகாஷ், துரைராஜ், செந்தில்குமார், சிவாஜி ஆகியோர் வனிதாவிடம் கேட்டுள்ளனர். இதையறிந்த பாலசுப்பிரமணியன், ராஜா, தனம் ஆகியோரும் அங்கு வந்தனர். 






இதனால் இரு குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கை, கம்புகளால் தாக்கி கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 தரப்பினரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக 2 தரப்பினரும் தனித்தனியாக ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் 2 தரப்பை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பெண் ஊர்க்காவல்படையை சேர்ந்த வனிதா உள்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். சொத்து தகராறில் மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கடியாகுறிச்சி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.