திருவண்ணாமலை அருகே வேங்கிக்காலில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை தொடங்கி பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான சீட்டு நடத்தி பணம் பெற்று வந்துள்ளது. நிறுவனத்தில் அதிகப்படியான மக்களை சேர்ப்பதற்காக தையல் பயிற்சி, அழகுகலை பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தி பெண்களிடம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் பலரை பல்வேறு மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளர்களாகவும், முகவர்களாகவும் நியமித்து பொதுமக்களிடம் பணத்தை பெற்றுள்ளனர். இந்த திட்டதிற்கு 50 முதல் 300 வரை செலுத்தினால் தங்கமூக்குத்தி, அதற்கு மேல் செலுத்தினால் புடவை, ஆடுகள் போன்றவை வழங்குவதாக பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். முகவர்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து அதிகப்படியான பணத்தை பெற்று முகவர்கள் தங்கள் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களை இத்திட்டத்தில் சேர்த்து பணத்தை பெற்றனர். திடீரென நிதி நிறுவனத்தை நடத்தி வந்த நிர்வாகி தலைமறைவாகி விட்டார்.




பணத்தை கொடுத்த பொதுமக்களும், வாங்கிக்கொடுத்த முகவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பணத்தை செலுத்திய பொதுமக்கள் முகவர்களிடம் பணத்தை கேட்டு நெருக்கடி மற்றும் பிரச்னை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண் ஆகியோர் திருவண்ணாமலையில் உள்ளதாக முகவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்றுமுன்தினம் முகவர்கள் நிறுவன உரிமையாளர் மனைவி மற்றும் உறவுக்கார பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்ய தாலுகா காவல்நிலையத்திற்கு செல்ல அறிவுறுத்தினர். நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண் ஆகியோர் கிரிவலப்பாதையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்கு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முகவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு வந்துமுற்றுகையிட்டனர்.


 




அப்போது முகவர்கள் அனைவரும், நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண்ணிடம் பணத்தை கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருவரையும் காவல் நிலையத்தில் இருந்து வெளியே இழுத்து முகவர்கள் அனைவரும் அவர்களை முற்றுகையிட்டு பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டனர். தாக்கவும் முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முகவர்கள் காவல்துறையினரிடம் கூறுகையில்,” நிதி நிறுவனம் நடத்தி சுமார் ரூபாய் 120 கோடி வரை பணத்தை ஏமாற்றி உள்ளனர். தமிழகம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நிறுவன உரிமையாளரின் மனைவி மூலம் தலைமறைவாக உள்ள உரிமையாளரை திருவண்ணாமலைக்கு வரவழைத்து பணத்தை பெற்று கொடுக்க வேண்டும்” என்றனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.