திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நிறுத்திவைக்கப்பட்ட பைக்குகள் திருடுபோன சம்பவத்தில் ஒரு கும்பல் பிடிபட்டது. போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.


திருவண்ணாமலைக்கு நாளுக்கு நாள் பல்வேறு மாநிலத்தில் இருந்து மாவட்டங்களில் இருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்கும் கிரிவலம் சுத்துவதற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இந்த நிலையில் கிரிவலப் பாதையில் காஞ்சி ரோட்டில் தனியார் நிதி நிறுவனத்தில் திருவண்ணாமலை பேகோபுரம் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் பணியில் இருந்தபோது அலுவலகத்திற்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள்  இரு சக்கர வாகனத்தை திருடி சென்றதைக் கண்டு ரமேஷ் தனது நண்பர்கள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் அவர்களை விரட்டி சென்று வேங்கிக்கால் ஓம் சக்தி கோயில் அருகே மடக்கி பிடித்து  இருசக்கர வாகனத்தை  பறிமுதல் செய்தனர்.


 




திருடனை நையப்புடைத்த பொதுமக்கள் 


மேலும் 3 நபர்களையும் பிடித்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் போளூர் அல்லிநகரத்தை சேர்ந்த அர்ஜுனன் பிரபு, கொண்டம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் ஆகிய மூவரும் உறவினர்கள் என்பதும் இவர்கள் குருவிக்காரர்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் செல்வதாக தங்களது கிராமத்தில்  உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்கள். திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி ரோட்டில் தற்காலிகமாக தங்கி வந்துள்ளனர். இவர்களுடன் அல்லி நகர் பகுதியில் சேர்ந்த வெண்ணிலா என்பவரும் இருந்து வந்துள்ளார். இவர்கள் வேங்கிக்கால், கிரிவல பாதை, தென்றல் நகர் உள்ளிட்ட பகுதியில் நோட்டமிட்டு இரு சக்கர வாகனங்களை திருடி அவர்கள் சொந்த கிராமத்தில் அல்லிநகர், கொண்டம் பகுதியில் உள்ளவர்களிடம் வெளியூரிலிருந்து குறைந்த விலையில் வாங்கி வந்ததாக கூறி ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்து உள்ளது  தெரியவந்தது. 




பைக்திருடிய 3 பேர்  கைது  


மேலும் இவர்கள் இதுபோன்று கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 19 இருசக்கர வாகனங்களை திருடி சென்று விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அர்ஜுனன் வயது (35), பிரபு வயது (34), சந்தோஷ் வயது (33) ஆகிய மூவறையும் காவல்துறையினர்  கைது செய்து அவர்கள் திருடி விற்பனை செய்த 19 இருசக்கர வாகனங்களை  பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களை அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். இவர்களுடன் இருந்து வந்த வெண்ணிலாவை காவல்துறையினர் கைது செய்யவில்லை, இந்த சம்பவம் திருவண்ணாமலை இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பொதுமக்கள் கூறுகையில் 


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருபுறங்களிலும் இரண்டு காவல்நிலையங்கள் உள்ளது. கிரிவலம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் உள்ளது. மேலும் காவல்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இருந்தும் திருடர்கள் கிரிவலப்பாதையில் பைக் திருட்டு, நகை பறிப்பு என பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது. ஆனால் காவல்துறையினர் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை பொதுமக்களாகிய நாங்களே திருட்டில் ஈடுபடுவர்களை பிடித்து வந்து கொடுக்கும் அளவில் உள்ளது என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.