திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரம் தொடர்பாக கேஜிஎப் பகுதியில் கொள்ளையர்களை தங்க வைத்த நபரை சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மற்றொரு தகவல் வந்தது. இதேபோல், திருவண்ணாமலை நகர எல்லைக்கு உட்பட்ட 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேனிமலை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.32,00,000 கொள்ளையடிக்கப்பட்டது. தொடர்ந்து 2 ஏ.டி.எம். மையங்களிலும் போலீசார் பார்வையிட்டு சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் மீது கொள்ளையர்கள் கருப்பு நிற 'ஸ்பிரே'வை அடித்து விட்டு உள்ளே சென்று உள்ளனர். மேலும், திருவண்ணாமலை நகருக்கு வெளியே 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலசபாக்கத்தில் உள்ள ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் ரூ‌ 3,00,000  திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் போளூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.18,00,000 கொள்ளையடிக்கப்பட்டது.


நள்ளிரவு 12 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் இருந்து மொத்தம் 72 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  கொள்ளையடிக்கப்பட்டது.  பணத்தை கொள்ளையடித்த  மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை கட்செய்த போது பணத்தில் தீ படாதவாறு புத்திசாலி தனமாக இயந்திரத்தை மட்டும் கட்செய்துள்ளனர்.  பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எரித்ததுடன், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் கொள்ளையர்கள் எரித்ததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டது. 




இது மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து நகரில் பல்வேறு இடங்களில் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் யாரேனும் உள்ளார்களா எனவும், திருவண்ணாமலை நகருக்கு வரும் அனைத்து சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். மேலும் ஆந்திரா மாநிலத்திற்கு எஸ்பி தலைமையில் ஒரு தனிப்பட்டையும் , தெலுங்கனா மாநிலத்திற்கு ஒரு தனிப்படையினர் , கர்நாடக மாநிலத்திற்கு ஒரு தனிப்படை என 3 எஸ்பி தலைமையில் மூன்று மாநிலத்திற்கும் விசாரணைக்கு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிரைம் உதவி காவல் கண்காணிப்பாளர் அளவிலான 20க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் அரியானா மாநிலத்தில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்கு சென்று ஆந்திரா வழியாக கோலார் கேஜிஎஃப் பகுதிக்கு தப்பிச் சென்று அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்றுள்ளனர். இதுதொடர்பாக கேஜிஎப் பகுதியில் சிறப்பு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தங்க வைத்த நபரை தற்பொழுது கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது அனைத்து ஊடகங்களிலும் கொள்ளையர்கள் 6  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக வந்த தகவல், தவறான தகவல் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் போலீசார் குற்றவாளிகளை நெருங்கி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.