ஆம்பூர் அருகே 15 ரூபாய் கடனுக்காக ஏற்பட்ட மோதலில்  ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபரை கைது செய்யக்கோரி  உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர், அதே பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட  சட்ட விரோதமாக ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து நடமாடும் பெட்டிகடை போல் ஹான்ஸ் போதை பொருட்களை  விற்பனை செய்து வருகிறார்‌.

 

இந்நிலையில் அதே பகுதியில் மாற்று சமூகத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்செல்வனிடம்  சென்று ஹான்ஸ் வாங்கி கொண்டு அதற்கான பணமான 15 ரூபாயை  பின்னர் தருவதாக தெரிவித்துள்ளார்.

 

பின்னர் செல்வத்தின் மகனான சுரேஷ்குமார் மற்றும் அவரது மகனும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள கடைக்கு காய்கறி வாங்குவதற்காக சென்றுள்ளனர்.



 

அப்பொழுது அங்கு  சுரேஷ்குமாருக்கும், தமிழ்செல்வனின் மகனான ஞானசேகருக்கும், இடையே 15 ரூபாய் பணத்திற்காக    வாய்தகராறு ஏற்பட்டு பின்னர்  கைகலப்பாக மாறியுள்ளது. இதில்  ஞானசேகர், சுரேஷ்குமாரை கடுமையாக தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது.

 

இந்நிலையில், சுரேஷ்குமார் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் சுரேஷ்குமாருக்கு தலையில் அதிக அளவு காயம் ஏற்பட்டிருப்பதிருப்பதாகவும் அதனால் அவரை மேல்சிகிச்சைக்காக  மருத்துவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ்குமார் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து சுரேஷ்குமாரை தாக்கிய ஞானசேகரை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்ககோரி, சுரேஷ்குமாரின் உறவினர்கள் உதயேந்திரம் - பேர்ணாம்பட் சாலையில் கற்களை வைத்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
  

 

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் (பொறுப்பு ) வாணியம்பாடி கோட்டாச்சியர் பானு  மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட போது  சுரேஷ்குமாரின் மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் அதிகாரிகளின் காலில் விழுந்து தனது தந்தையை கொன்றவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறி அழுதனர்.



 

மேலும் சுரேஷ்குமாரை கடுமையாக தாக்கி கொலை செய்த  ஞானசேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சுரேஷ்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் உத்தரவு அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

இதனால் உதயேந்திரம் - பேர்ணாம்பட் சாலையில் இரண்டு மணி நேரத்திற்க்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் 15 ரூபாய் கடனுக்காக நபர் அடித்து கொலை செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.