திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணையானது நடைபெற்று வருகிறது. 

Continues below advertisement

தமிழ்நாட்டை அலற விட்ட சம்பவம்

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிறது. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இதனை ஒரு அஸ்திவாரமாக தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இப்படியான நிலையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அலற விடும் அளவுக்கு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சம்பவம் ஒன்று மார்ச் 2ம் தேதி இரவு நடைபெற்றது. 

அங்கு களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இங்கு பல்வேறு சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செயல்பட்டு வரும் டீக்கடை ஒன்றில் மார்ச் 2ம் தேதி இரவு 3 பைக்குகளில் 9 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. டீக்கடை முன்பு நின்றிருந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடியுள்ளனர். அவர்களை துரத்திய கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளது. மேலும் எதிரில் எதேச்சையாக வந்தவர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது. 

Continues below advertisement

இந்த சம்பவத்தில் வட மாநில தொழிலாளி ஒருவரும், உள்ளூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபரும் கொலை செய்யப்பட்டனர். 5 பேர் படுகாயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

போலீசார் குவிப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இது சாதிய மோதல் என முதலில் கருதப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விசாரணைக்கு வந்த போலீசாருக்கும் குழப்பம் ஏற்பட்டது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணி நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட போலீசார் நாங்குநேரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றத்தை தணிக்க பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். 

இதனிடையே தங்கள் கிராமத்தில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. 

7 பேர் கைது

இந்த நிலையில் போலீசார் தேடுதல் வேட்டையில் கண்ணன், அந்தோணி மைக்கேல் ராஜ், உச்சிமாகாலி, வசந்தகுமார், சுப்பையா என்ற சுபாஷ், கல்யாணி, இசக்கிராஜா ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கல்யாணி, சுபாஷ் இருவரும் நாங்குநேரி மாணவர் சின்னதுரையை வீடு புகுந்து சாதிய ரீதியிலான தாக்குதல் நடத்தியதில் கைது செய்யப்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. 

மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நவீன் வாழ்க என கோஷமிட்டதாக சொல்லப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த நவீன் வழக்கு ஒன்றின் காரணமாக ஊரை விட்டு வெளியே வாழ்ந்து வருகிறார். ஆனால் தான் இப்படி செய்யவில்லை என அவர் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்தார். இதனிடையே நவீனுக்கு எதிராக செயல்படும் நபர் தான் மதுரை சிறையில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.