நெல்லை மாவட்டம் மேலக்குளம் அருகே நடுவூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 62). இவரின் மனைவி சண்முகலட்சுமி (50). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அங்குள்ள கோவிலுக்கு சென்று சாமி  கும்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்பையா (70) என்பவர் மது போதையில் கையில் அரிவாளை வைத்துக் கொண்டு தெருவில் வருபவர்களை அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கணவன், மனைவி 2 பேரும் கோவிலுக்கு சென்று வருவதை பார்த்த சுப்பையா, சண்முகலட்சுமியை பார்த்து அவதூறாக பேசியுள்ளார். இதனை கேட்ட சண்முகலட்சுமி அவரை கண்டித்துள்ளார். போதையில் இருந்த சுப்பையா தன்னை கண்டித்ததும் ஆத்திரத்தில் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் சண்முகலட்சுமியை வெட்டியுள்ளார்.


இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன் தனது மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். சுப்பையாவிடமிருந்து மனைவி காப்பாற்ற தடுத்ததில் அவருக்கும் 2 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்ததுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் அந்த அரிவாளை பிடுங்கி சுப்பையாவை சரமாரியாக வெட்டினார். இதில் முதலில் சுப்பையா இரத்த வெள்ளத்தில் அங்கேயே கீழே சரிந்தார். தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் பலத்த வெட்டுக்காயத்துடன் அவர்களும் தெருவிலேயே சரிந்து விழுந்தனர். இதனை பார்த்த அப்பகுதியினர் பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.. தகவலறிந்த அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே சுப்பையா உயிரிழந்தார். மேலும் காயமடைந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சண்முகலட்சுமி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று திரும்பிய தம்பதியை வழிமறித்து குடிபோதையில் ரகளை செய்து அவர்களை அரிவாளால் வெட்டியதுடன் தானும் அதே அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம்  நெல்லையில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.