தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன்  மந்திரம். இவர்  கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு பின்னர் பாளையங்கோட்டை மகாராஜாநகர் தியாகராஜநகர் ரயில்வே பீடர் சாலையில் நடந்து வந்துள்ளார். அப்போது மந்திரத்தை ஒருவர் அரிவாளோடு விரட்டியுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய  நிலையில் அவரை துரத்தி சென்ற ஒருவர் மகாராஜாநகர் ரயில்வே மேம்பாலம் அருகே சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்றுள்ளார்.. இதில் அவரது வலது கை துண்டானதோடு பின்னந்தலையிலும் வெட்டு விழுந்துள்ளது. சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.


பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மந்திரத்தை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மந்திரம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் நடைபெற்ற இடம் பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலையம் உட்பட்டது என்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் மந்திரத்தின் பக்கத்து ஊரை சேர்ந்த நபர்களே வெட்டிக் கொன்றதாக தெரிய வந்துள்ளது. 




தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் செய்துங்கநல்லூர் மேல தூதுகுழி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னதுரை என்பவரின் 28 வயது மகாராஜன் என்பவர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொலையான மந்திரம் அவரது மனைவியான கவிதாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அதோடு மந்திரத்தின் மனைவி கவிதாவிற்கும் மகாராஜனுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மந்திரம் மனைவியை சந்தேகப்படும் நிலையில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மந்திரத்தை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்த மகாராஜன் திருநெல்வேலி மகாராஜாநகர் ரயில்வே மேம்பாலத்தின் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மந்திரம் மது அருந்தி கொண்டிருந்தபோது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து மகாராஜன் மந்திரத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.