சென்னையில் உயர்ரக போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் சங்க நிர்வாகி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 



சென்னையில் காரை அக்குவேர் ஆணிவேராக சோதனை செய்த டிஆர்ஐ - சிக்கிய ரூ. 50 கோடி மதிப்புள்ள போதை பொருள்


செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனை செய்தார்கள். அப்போது ஒரு காரை மடக்கி ஆய்வு செய்தனர். அதில் டிரைவர் உள்பட மொத்தம் 3 பேர் பயணம் செய்தார்கள். அந்த வாகனத்தில் உயர் வகை போதைப் பொருள் கடத்தப்படுவதாக ஏற்கனவே ரகசிய தகவல் கிடைத்திருந்தது. அதன் அடிப்படையில் அந்தக் காரை அலசி ஆராய்ந்தனர். எதுவும் கிடைக்கவில்லை. 


இருந்தாலும் புலனாய்வுத்துறையினருக்கு சந்தேகம் தீர வில்லை. எனவே காரின் பின்பக்க இருக்கையை அகற்றி பார்த்தனர். அதற்கு அடியில் ரகசிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெட்டிக்குள் 10 பொட்டலங்களில் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள்கள் இருந்தன. இதன் மொத்த எடை 10.13 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.50.65 கோடி. இதையடுத்து அந்த 3 பேரையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்தனர். பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.




அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது தாங்கள் 3 பேரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் என்பவரின் அறிவுரைப்படி செயல்பட்டு வந்ததாக குறிப்பிட்டார்கள். இதையடுத்து தொழிலதிபர் விஜய்யையும் வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தார்கள். அவரிடம் விசாரித்த போது, அவர் இன்னொருவரை நோக்கி கைநீட்டினார். அதாவது தூத்துக்குடியைச் சேர்ந்த ரெனால்டு வில்லவராயர் என்பவரிடம் இருந்து இந்தப் போதைப் பொருளை பெற்றதாக கூறியுள்ளார்.


இதையடுத்து ரெனால்டு வில்லவராயரையும் கைது செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினார்கள். அவர் எழும்பூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் தூத்துக்குடியில் மீனவர் சங்க நிர்வாகியாகவும், கப்பல் நிறுவன உரிமையாளருமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் கைது செய்யப் பட்டார். அந்த வகையில் மொத்தம் 6 பேர் சிக்கியுள்ளார்கள். அவர்களிடம் இருந்து ரூ.1.30 கோடி பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 6 பேரும் துபாயில் உள்ள முக்கிய நபரின் கட்டளைப்படி செயல்பட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. 


அந்த நபர் தான் போதைப்பொருட்கள் வேண்டும் என ரெனால்டு வில்லவராயருக்கு கட்டளை பிறப்பிப்பாராம். பின்னர் ரெனால்டு வில்லவராயர் மற்றவர்களின் உதவியுடன் மியான்மர் நாட்டில் இருந்து மெத்த பெட்டமின் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்து அதை சென்னை வழியாக தென் மாவட்டங்களுக்கு கொண்டு சென்று பின்னர் படகுமூலம் இலங்கைக்கு கடத்தி அங்கிருந்து பிற நாடுகளுக்கும் போதைப் பொருட்களை அனுப்பி வந்திருப்பது தெரியவந்துள்ளது. மெத்தம்பேட்டமைன் அதிக போதை கொண்டது. மிகச்சிறிய அளவே நுகர்ந்தால் போதும் போதையில் மிதப்பார்கள். அதனால் இதற்கு அதிக விலை உள்ளது.