கோவில்பட்டி அருகே  முன் விரோதம்  காரணமாக  டூரிஸ்ட் வேன் உரிமையாளர் சுடு காட்டில் வெட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா மகன் மாடசாமி (வயது 37). இவர் தனக்கு சொந்தமான டூரிஸ்ட் வேன் மூலம் தனியார் மில்லுக்கு தொழிலாளர்களை பணிக்கு அழைத்து சென்று வரும் பணியை செய்து வந்தார். இவருக்கு மகாதேவி (30) என்ற மனைவியும் மகாஸ்ரீ (11) மதி (4) என இரு குழந்தைகள் உள்ளனர்.




பணியை முடித்து விட்டு தினமும் இரவு 8 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். நேற்று இரவு வெகுநேரமாகியும் மாடசாமி வீட்டுக்கு வரவில்லை. அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.  இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் மூப்பன்பட்டி சுடுகாட்டில் கொடூரமான வெட்டு காயங்களுடன் மாடசாமி படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுகாதேவி தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த மாடசாமியின்  உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




கொலை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,  கொலையான மாடசாமிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த கோபி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  ஒரு வாரத்துக்கு முன்பு கோபி வீட்டுக்கு சென்று மாடசாமி தகராறில் ஈடுபட்டுள்ளார்.  அப்போது மாடசாமி,  கோபியை அடித்து உதைத்தாராம்.  இதனால் ஆத்திரமடைந்த கோபி, நேற்று இரவு மாடசாமியை வழிமறித்து சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.