திருவாரூர் அருகே கூட்டுறவு நகரை சேர்ந்தவர் வடிவேல். இவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கவிதாவின் தந்தை இயற்கை எய்தியதை தொடர்ந்து வேதாரண்யம் அருகே உள்ள கரியாபட்டினத்திற்க்கு கடந்த 7ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வடிவேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் வீட்டில் சோதனை செய்த போது வீட்டில் இருந்த 25 சவரன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. 



 

இதனையடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கபபட்டு திருட்டு நடந்த இடத்தில் பதிவான கை ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இதேபோன்று திருவாரூர் அருகே கல்லடி தோப்பு பகுதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவாரூர் அருகே புலிவலம் கல்லடி தோப்பு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். சாக்கு வியாபாரியான இவர் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் நாகராஜ் தனது மனைவி பரமேஸ்வரி மற்றும் மகன்கள் நவீன்குமார், விக்னேஷ் ஆகியோருடன் வீட்டில் தூங்கியுள்ளனர். மறுநாள் காலை கண் விழித்து பார்த்தபோது வீட்டின் அறையில் பீரோவை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 8 சவரன் நகை 90 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து நாகராஜன் திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு புகார் கொடுத்தார். அதன்பேரில் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருட்டுக்கு காரணமான மர்ம நபர்களை தேடி வருகின்றனர். புலிவலம் பகுதியில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருவதால் போலீசார் ரோந்து பணியினை தீவிரப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



 

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  காவல்துறையினர் நகர் பகுதிகளில் மட்டும் போன்ற ரோந்து பணிகளில் ஈடுபடாமல் கிராமப்புறங்களிலும் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் காவல் துறையினருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி கொள்ளையர்களை காவல் துறையினர் விரைந்து பிடித்து தங்களது நகை மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு காவல் துறையினருக்கு பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.