சிசிடிவி கேமிராவை சாக்கால் மூடி நகை கடையில் 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் 4 கிலோ வெள்ளி திருடப்பட்டுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான கடைகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பினும் இந்த கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை இருசக்கர வாகன திருட்டு மற்றும் வணிக கடைகளில் பூட்டை உடைத்து திருடுவது என்பது கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து விலைமதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதே பகுதியில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் பைக்குகளை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. 



 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவணிதம் கடைத் தெருவில் கலையமுதன் என்பவருக்கு சொந்தமான ரதிமீனா நகைக்கடை மற்றும் நகை அடகு கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்து கலையமுதன் மற்றும் கடை ஊழியரான அருள்மணி ஆகியோர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை ரதிமீனா ஜுவல்லரிக்கு அருகிலுள்ள முகமது இக்பால் என்பவருக்கு சொந்தமான நேஷனல் மளிகை கடையினை திறப்பதற்காக முகமது இக்பால் வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் உள்ள ரொக்கம் 17,000 ருபாய் திருடப்பட்டிருப்பதை அறிந்த அவர் அருகிலுள்ள ஜுவல்லரியின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கலை அமுதனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 



 

இதனையடுத்து கலையமுதன் தனது நகை கடைக்கு வந்து பார்த்தபோது ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் நான்கு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுப் போய் உள்ளது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கலையமுதன் கொரடாச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜுவல்லரியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவில் சாக்கை போட்டு மூடி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 

மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அடுத்தடுத்த கடைகளில் நடந்துள்ள திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதனை கவனிக்கும் திருடர்கள் முகமூடி அணிந்து கொண்டோ அல்லது சிசிடி கேமராவை உடைத்து விட்டோ, அல்லது சிசிடிவி கேமராவின் மேல் துணி போன்றவற்றை போட்டு விட்டோ திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மேற்குறிப்பிட்ட திருட்டு சம்பவத்தில் கொள்ளையன் சிசிடிவி கேமராவின் மீது சாக்கை போட்டு மூடி விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ள கண்கொடுத்தவணிதம் என்பது உள்ளடங்கிய கிராம பகுதியாகும் இந்த இடத்தில் துணிகரமாக இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது அப்பகுதியில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட காவல் துறையின் சார்பில் நகரப் பகுதிகளுக்கு மட்டுமல்லாது கிராம பகுதிகளுக்கும் அங்கு உள்ள காவல் நிலையம் மூலம் இரவு நேர ஓன்று பணிகளை தீவிர படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.