திருவாரூர்: கள்ளச் சந்தையில் அரசு மதுபானம் விற்கும் நபரிடம் லஞ்சம் வாங்கிய தலைமை  காவலர் உள்ளிட்ட இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

 


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட களப்பால் பகுதியில் வாட்டார் பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர் அரசு மதுபானங்களை வாங்கி கள்ளச் சந்தையில் விற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி இரவு ராஜதுரை களப்பாளில் இருந்து 75 அரசு மதுபான பாட்டில்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் இரவு நேரந்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருக்களார் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் கலையரசன் மற்றும் முதல் நிலை காவலர் விஷ்ணு ஆகியோர் ராஜதுரை வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்துள்ளனர்.

 

அப்போது அந்த இரு சக்கர வாகனத்தில் 75 அரசு மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டறிந்தனர்.இதனை யடுத்து தலைமை காவலர் கலையரசன் மற்றும் விஷ்ணு ஆகியோர் ராஜதுரையிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.அதனைத் தொடர்ந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக ராஜதுரை பத்தாயிரம் ரூபாயை காவலர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் இது குறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் காவலர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் காவலர்கள் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் இருவரையும் பணி இடை நீக்கம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.