மகன் கண் முன்பே தொழிலதிபர் வெட்டி படுகொலை - பட்டப் பகலில் தஞ்சையில் பயங்கரம்

போக்குவரத்து மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் இது போன்று படுகொலை சம்பவம் நடந்தது தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக தொழிலதிபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement

திருவாரூரை சேர்ந்த தொழிலதிபர்

திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூரைச் சேர்ந்தவர் பாபு (48). தொழிலதிபர். திமுக பிரமுகர். இவர் காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவர் தஞ்சாவூரில் உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக காரில் தனது மகன் பாலாவுடன் திருவாரூரில் புறப்பட்டு நேற்று மதியம் வந்து கொண்டிருந்தார்.

வழிமறித்து நின்ற கார்

தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் ஒரு கடை அருகில் காரை நிறுத்திவிட்டு பாலா மட்டும் இறங்கி சென்று மொய் கவர் வாங்கிவிட்டு மீண்டும் காரில் ஏறினார். அப்போது எதிரே வந்த கார் பாபுவின் காரை வழி மறித்து நின்றது. மேலும் காரில் இருந்தவர்கள் சத்தமாக ஹாரனை எழுப்பி உள்ளனர். 

மகன் கண் முன்பே தந்தை வெட்டி படுகொலை

இதனால் தன் காரை விட்டு பாபு இறங்கியுள்ளார். அப்போது வழிமறித்து நின்ற காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் அரிவாளால் பாபுவை சரமாரியாக அவரது மகன் பாலா கண் முன்பு வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.  இதில் படுகாயம் அடைந்து சாலையில் விழுந்த தனது தந்தை பாபுவை கண்டு பாலா அலறி துடித்துள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பாபு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை

தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஆசிஷ் ராவத், ஏ டி எஸ் பி ஜெயச்சந்திரன், டிஎஸ்பிக்கள் நித்யா, ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொழில் போட்டி காரணமாக தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருவாரூர் மாவட்டம், வைப்பூர் காவல் நிலையத்தில் பாபு ஏற்கனவே புகார் செய்திருப்பதும், அதன் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த கொடூர கொலையால் பரபரப்பு

போக்குவரத்து மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் இது போன்று படுகொலை சம்பவம் நடந்தது தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாரியம்மன் கோயில் பகுதி எப்போதும் வாகன போக்குவரத்தால் நெரிசல் மிகுந்த பகுதி. இதில் நேற்று அதிகளவு முகூர்த்தங்கள் வேறு. இப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் அனைத்திலும் திருமண நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. இதனால் வழக்கத்தை விட அதிகளவு போக்குவரத்து இருந்துள்ளது. அப்படிப்பட்ட நேரத்தில்தான் இந்த கொலை சம்பவம் கொடூரமாக நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola