முத்துப்பேட்டை அருகே பட்டபகலில் வீடு புகுந்து எஸ்ஐ மனைவியிடம் 8பவுன் தாலி செயினை பறித்து சென்ற கொள்ளையர்களை 11 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவில் அலையாத்திக்காட்டில் சுற்றிவளைத்து போலீசார் பிடித்தனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் ஈசிஆர் சாலையில் வசிப்பவர் கண்ணன் இவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளார். இந்தநிலையில் கண்ணன் பணிக்கு சென்றதால் வீட்டில் இவரது மனைவி சங்கீதா, மற்றும் மகள் சிந்து ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். வெயில் தாக்கம் காரணமாக மாடிவீட்டின் போர்டிகோவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது ஒரு பைக்கில் வந்த அடையாளம் தெரிய இரு கொள்ளையர்கள் பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு வாசல் கதவை திறந்து உள்ளே புகுந்துள்ளனர். அப்போது நாய் சத்தமிட்டு குறைத்துள்ளது. இதனைக்கண்ட கொள்ளையர்கள் நாயை தாக்கி விட்டு உள்ளே புகுந்து  கத்தியை காட்டி சங்கீதா கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் அவர் அணிந்து இருந்த சுமார் 8பவுன் நகைகளை பறித்து எடுத்துக்கொண்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர். 



 

இதனால் அதர்ச்சியடைந்த சங்கீதா மற்றும் அவரது மகள் சிந்து வாசலுக்கு வந்து சத்தமிட்டதும் அங்கு பொதுமக்கள் கூடி தப்பி சென்ற வாலிபர் இருவரையும் விரட்டி சென்றனர். இதனை கேள்விபட்ட எடையூர் மற்றும் முத்துப்பேட்டை போலீசாரும் சினிமா பாணியில் கொள்ளையர்கள் சென்ற பைக்கை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.

 

இதனைக்கண்ட கொள்ளையர்கள் அங்குமிங்கும் சென்று போலீசாரையும் மக்களையும் அலைக்கழித்து கோபாலசமுத்திரம் வழியாக தில்லைவிளாகம் சென்று பின்னர் ஜாம்புவானோடை வந்து அலையாத்திகாடு செல்லும் சாலையில் சென்றனர். ஒருகட்டதில் போலீசார் நெருக்கத்தில் வந்ததை அறிந்த கொள்ளையர்கள் அப்பகுதியில் இருந்த ரால்பண்ணை குளத்தில் பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து வாய்காலில் குதித்து பின்னர் கோரையாற்றில் நீந்து சென்று அலையாத்திகாட்டுக்குள் புகுந்தனர். இதனால் போலீசாரல் அவர்களை பிடிக்க முடியாமல் போனது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் முத்துப்பேட்டை எடையூர், பெருகவாழ்ந்தான் ஆகிய காவல் நிலையங்கலிருந்து வந்த  ஏராளமான போலீசார் அலையாத்திகாடுக்கு படகு மூலம் சென்று தேடினர் பின்னர்  கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டு  டிரோன் கேமரா மூலம் மாலை வரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

 

பின்னர் இரவாகி இருண்டு போனது. அப்படியும் அசராத போலீசார் அலையாத்திக்காடு மற்றும் அதன் அருகே உள்ள பேட்டை பகுதி காடு திட்டு பகுதியில் சுற்றி வளைத்து இரவு தொடர்ந்து நல்லிரவாகியும் இருவரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்பொழுது அலையாத்திகாடு எல்லையில் உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு எம்கே நகர் அருகே செல்லும் மாமணி ஆற்றில் கொள்ளையர்கள் இருவரும் நீந்து வருவதை கண்ட போலீசார் சுற்றிவழித்து பிடித்தனர். பின்னர் போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அடுத்த மேல சொக்கநாதபுரம் வினோபா காலனி பகுதியை சேர்ந்த வில்லியம் மகன் தர்மதுரை (20), அதே போடிநாயக்கனூர் அடுத்த அணைக்கரை காந்தி சாலை பகுதியை சேர்ந்த முத்து மகன் நல்லவன் என்கின்ற நல்ல தம்பி (27) என்று தெரிய வந்தது. இவர்கள் இருவர் மீதும் தேனி கள்ளக்குறிச்சி விழுப்புரம் போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு அடிதடி கொலை  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும் இதில் நல்லதம்பி என்பவர் தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக காவல்துறையினரால் கைது செய்யப்பட முடியாமல் நல்ல தம்பி தப்பி வந்துள்ளதாகவும் தற்பொழுது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

மேலும் கடைசியாக இவர்கள் இருவரும் போடிநாயக்கனூர் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து தப்பி வேளாங்கண்ணிக்கு வந்து தனியார் லாட்ஜில் மூன்று மாதமாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டை பகுதி நோக்கி வந்த பொழுது இந்த திருட்டு சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் மேலும் தேனீ கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டால் அங்கிருந்து தப்பி வேளாங்கண்ணிக்கு வருவதும் மீண்டும் வேளாங்கண்ணி திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இங்கிருந்து தப்பித்து கேரளா பகுதிக்கு செல்வதும் வாடிக்கையாக இவர்கள் வந்துள்ளது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது இதனையடுத்து முத்துப்பேட்டை போலீசார் கொள்ளையர்கள் இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சினிமாவை மிஞ்சும் இச்சம்பவத்தில் சிறப்பாக ஈடுபட்ட முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் தலைமையில் கொண்ட போலீசார் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் பாராட்டினார்.

இதனால் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.