தீபாவளி பண்டிகை வருகின்ற 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, ஒரு சில அரசு அலுவலகங்களில் பரிசு பொருட்கள் குவிந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து அரசு அலுவலகங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை முதல் தீபாவளி பண்டிகைகளுக்காக பரிசு பொருட்கள் அதிகாரிகள் பெறுகிறார்களா என பார்த்து வந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர் அலுவலகத்தில் பட்டாசு உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் அடுத்தடுத்து சிலர் சென்று வருவதை கண்காணித்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல்கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் ஆய்வாளர் மைதிலி உள்ளிட்ட காவல்துறையினர், நேற்று மாலை 4:30 மணிமுதல் தொடங்கி இரவு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் யாரும்வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த, மேசைகள் பீரோ உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்  தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.



மேலும், அலுவலகத்தில் இருந்த ஒரு அறை மட்டும் பூட்டிய நிலையில் இருந்தது அதன் பின்னர் அறையின் சாவியை கேட்ட காவல்துறையினரிடம் அறையை திறக்க அங்கிருந்தவர்கள் மறுத்துவிட்டனர். அதனை தொடர்ந்து சாவி வைத்துள்ள அலுவலர் வெளியில் சென்றதாக தெரிவித்தனர். பின்னர், அவர் வருவதற்கு  நீண்ட நேரம் ஆனாலும் சரி அந்த அறையை பார்க்காமல் செல்வதில்லை என்ற முயற்சியுடன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அங்கேயே மற்ற இடங்களில் சோதனை நடத்தினர்.  சிறிது நேர முயற்சிக்கு பிறகு அந்த அறை திறக்கப்பட்டது. அந்த அறையில், ஏராளமான பட்டாசு பாக்ஸ்கள் மற்றும் பரிசு பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், ஒரு சில பட்டாசு பாக்ஸ்களில் அதை அன்பளிப்பாக வழங்கியவரின் பெயர் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்டு பட்டாசு பாக்ஸ் மீது ஒட்டப்பட்டு இருந்து. மேலும் அவைகளை, அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.



இந்த ரெய்டு சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில்:- மாவட்ட ஆட்சியர் பெருதிடல் அலுவலகத்தில் இயங்கி வரும் வணிகவரித்துறை அலுவலகத்தில் நடத்திய சோதனையின்போது பரிசுப் பொருட்களையோ, பணத்தையோ யாரும் நேரடியாக வாங்கும் போது கையும் களவுமாக பிடிபடவில்லை. எனவே, கைது நடவடிக்கை நாங்கள் எடுக்கவில்லை, ஆனாலும், அரசு அலுவலர்கள் பொது மக்களிடமிருந்து பரிசாக பொருட்களையோ, பணத்தையோ வாங்குவதும் லஞ்சம் வாங்கியது குற்றம் என்றே கருதப்படும்.  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்படும். மேலும் இந்த அலுவலகத்தில் ஒரு ஊழியரிடம் 20 ஆயிரம் இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் வங்கி ஏடிஎம்மில் எடுத்ததற்கான ஆதாரத்தை ஒப்படைத்தார். எனவே, அந்த பணம் அவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பரிசு பொருட்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையை யொட்டி வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்த திடீர் சோதனை அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.