திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மகேஸ்வரி என்ற பெண், திரைப்படங்களில் வரும் பெண் ரவுடி போல அந்த பகுதி முழுவதும் கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளார். இவர் சிறு சிறு பாக்கெட்டுகளில் ஸ்பிரிட் எனப்படும் எரிசாராயத்தை நிரப்பி கூலித் தொழிலாளிகளை குறி வைத்து விற்பனை செய்து வந்ததாகவும், இதன் மூலம் கூலி தொழிலாளிகள் பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு அந்த பகுதியில் ரகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 


தொடர்ந்து, இந்த பாக்கெட் சாராய பழக்கத்தால் அப்பகுதியில் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சம்பவம் நிகழ்ந்து வந்துள்ளததாகவும் கூறப்பட்டது.  இதையடுத்து, பாக்கெட் சாராயம் குறித்து காவல்துறையில் புகாரளித்த இளைஞர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடப்பட்டும், ஒரு சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. 90களில் காலக்கட்டம் தொடங்கியது முதலே மகேஸ்வரியின் கள்ளச்சாராய விற்பனை பெரும் வளர்ச்சியை பெற்று வந்துள்ளது. 


கடந்த 27 ஆண்டுகளாக வாணியம்பாடியில் கள்ளச்சாராயம் தொழில் செய்துவந்த மகேஸ்வரியின் மீது இதுவரை 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், ஏழு முறை அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது. இருந்தும் மகேஸ்வரி சட்டத்திற்கு பயப்படாமல் இன்றுவரை தைரியமாக கள்ளசாராய தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளார். 




இந்தநிலையில், சில தினங்களுக்கு முன் திருவிழா கூட்டத்தில் கள்ளச்சாராயம் விற்றவர்களைத் தட்டிக் கேட்க முயன்ற இளைஞர்கள் மீது மகேஸ்வரியின் ஆட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைக் கண்டித்து வாணியம்பாடி நேதாஜி நகர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து இளைஞர்களே களமிறங்கி 30க்கும் அதிகமான சாராய மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.


அங்குவந்த காவல்துறையினர் சாராய பாக்கெட்களை எடுக்க முயன்றபோது, மகேஸ்வரி கும்பலை கைது செய்தால்தான் சாராய பாக்கெட்டுகளை விடுவிப்போம் என அவர்கள் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் பொறுமை இழந்து போராட்டங்களை அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவாக வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா வாணியம்பாடி சென்று, தாலுகா காவல் நிலையத்தில் மகேஸ்வரி மீதான வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். விரைந்து அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதையடுத்து. டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் மகேஸ்வரியை பிடிக்க களமிறங்கினர்.


மகேஸ்வரி திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன் உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும், வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் பதுங்கி இருந்த மகேஸ்வரியின் அடியாட்கள் 20க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.


சாராய கும்பலிடம் நடத்திய விசாரணையில் நேதாதி நகர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சாராய கேண்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காவல்துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற மகேஸ்வரியின் மகன் சின்னராஜ், அவனது கூட்டாளி மோகன் ஆகியோர் அருகில் இருந்த பாறைகளுக்கு நடுவே விழுந்ததாகவும், அதில், சின்னராஜ்க்கு கை முறிவும், மோகனுக்கு கால் முறிவும் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண