சமீபத்தில் திரைக்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த "தீரன் அதிகாரம் எண் ஒன்று" திரைப்படத்தின் உண்மை சம்பவம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சேலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவரது வீடு சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அதிகாலை அவரது வீட்டிற்குள் கொடூர கொள்ளை கும்பல் ஒன்று புகுந்தது. காவளாளி கோபாலை கொன்று விட்டு, வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் தாளமுத்து நடராஜனை துப்பாக்கியால் அடித்து கொலை செய்தது. பின்னர் வீட்டில் இருந்த சுமார் 200 பவுன் தங்க நகைளை கொள்ளையடித்துச்சென்றது. 



இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வடமாநிலத்தை சேர்ந்த "பவாரியா" என்ற கொள்ளை கும்பல் இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இக்கும்பல் 2005 ஆம் ஆண்டு திருவள்ளூர் பெரியபாளையம் முன்னாள் அமைச்சர் சுதர்சனம் உட்பட தமிழகத்தில் 25 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு கொண்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து  அதிகாரி ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நாட்களில் அவர்களை சுற்றிவளைத்த காவல்துறையினர் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள், மற்றவர்கள் கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். பவாரியா கும்பல் தலைவனான ஓம்பிரகாஷ், அசோக், ராகேஷ் குண்டு, ஜெயில்தார்சிங், பப்லு, பீனாதேவி, சந்து ஆகிய 7 பேரை கைது செய்தனர். 



இதேபோன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் "பவாரியா" கும்பலின் தலைவன் ஓம் பிரகாஷ், அசோக், ராகேஷ் குண்டு, ஜெயித்தார் சிங், ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் ஓம்பிரகாஷ் தற்கொலை செய்துகொண்டானர். இதில் ஓம்பிரகாஷ் மருமகன் ஜெயில்தார்சிங், மனைவி பீனாதேவி, சகோதரி சந்து மற்றும் பப்லு ஆகியோர் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாகி விட்டனர். இவர்களுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்டும் பிறப்பித்திருந்தது. இந்த கொலை சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வழக்கை விரைந்து நடத்தும் வகையில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் கோடா உத்தரவிட்டார். இதையடுத்து துணை காவல் ஆணையாளர் மோகன்ராஜ் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சந்திர கலா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர முயற்சியில் இறங்கினர். இந்நிலையில் ஓம்பிரகாசின் மருமகன் ஜெயித்தார் சிங் சென்னையில் பதுங்கியிருப்பதாககிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேலம் தனிப்படை காவல்துறையினர் சென்னை விரைந்தனர். தேனாம்பேட்டையில் வைத்து ஜெயில்தார்சிங்கை கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். இவரிடம் துணை காவல் ஆணையாளர் மோகன்ராஜ் விசாரணை நடத்தினார். பின்னர் சேலம் 4 ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு வரும் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.