மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி முகாமுக்கு வந்தவரை வரிசையில் முறையாக நிற்க சொன்ன மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


யவத்மால் அருகே திக்ராஸ் பகுதியில் மகாராஷ்டிரா அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டு உள்ளது. அங்கு மனோகர் ரத்தோர் (32) எனஅர நபர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக மையத்திற்கு வந்தார். ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் முகாமில் தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்து உள்ளனர். இதனை கண்ட மனோகர் ரத்தோர் உடனே தடுப்பூசி செலுத்திவிட்டு கிளம்புவதற்காக வரிசையில் நிற்காமல் முன்னே சென்று இருக்கிறார். அவரை அங்கு இருந்த சுகாதார ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் தகராறு செய்த மகோகர் ரத்தோர் தனக்கு முதலில் தடுப்பூசி போட சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார்.



இதனால் சலசலப்பு ஏற்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி பாதிக்கப்பட்டது. அப்போது கொரொனா தடுப்பூசி போடும் பணியில் இருந்த மருத்துவர் சந்தோஷ் ஜாதவிடம் சென்று தன்னுடைய பெயரை தடுப்பூசிக்காக முன்பதிவு செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார் மனோகர். ஆனால், மனோகர் பெயரை முன்பதிவு செய்ய மறுத்துவிட்ட மருத்துவர் சந்தோஷ் ஜாதவ், வரிசையில் நின்று தடுப்பூசி போட வருமாறும், தகராறு செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மனோகர் ரத்தோர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவர் சந்தோஷ் ஜாதவை குத்த முயன்றார்.


 உஷாரான மருத்துவர், தனது மனோகர் ரத்தோரிடன் கையை பிடித்துக் கொண்டார். இதனால் பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்தார் மருத்துவர் சந்தோஷ் ஜாதவ். இருப்பினும், மனோகர் ரத்தோரின் வேகத்தால், கத்தி மருத்துவரின் சட்டையை கிழித்தது. தடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.  சுகாதார பணியாளர்களிடம் தகராறு செய்து மருத்துவரை கத்தியால் குத்த முயன்ற மனோகர் ரத்தோரை அங்கிருந்த மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மனோகர் தத்தோரிடம்  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஒரு கட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு அச்சப்பட்டுக் கொண்டிருந்த மக்கள் கொரோனா கோரத் தாண்டவம் காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். தற்போது அது கத்திக்குத்து வரை சென்று முடிந்திருக்கிறது. 


இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் தங்கள் உயிரை துச்சமென கருதி சிகிச்சை அளித்து பல லட்சக்கணக்கான மக்களின் உயிரை காப்பற்றி வருகின்றனர். ஜூன் மாத நிலவரப்படி இந்தியாவில் சுமார் 800 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள். ஆனால், சிலர் மருத்துவர்களின் வலியை உணராமல், அவர்கள் மீதே வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.