தஞ்சையில் பயின்று வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் மாபெரும் சர்ச்சையாக வெடித்தது. மாணவியை மதம்மாற்றச் சொல்லி வற்புறுத்திய காரணத்தால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இந்த விவகாரம் மாபெரும் பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


 


மாணவியின் தந்தை முருகானந்தம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி, தூய இருதய அன்னை சபை தலைமை சகோதரி தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில்,"முருகானந்தம் குடும்பத்தாரையோ வேறு எவரையுமோ குறை கூறும் விதமாக இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை. எங்கள் நிறுவனத்தின் மீது அவதூறான குற்றச்சாட்டு முந் வைக்கப்பட்டுள்ளதால் மட்டுமே இந்த மனுவைத் தாக்கல் செய்கிறோம் என கூறியிருந்தார். அதோடு சீலிடப்பட்ட கவரில் ரகசிய மனுவும் தாக்கல் செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. 


இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், "இதுவரை 53 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. தடய அறிவியல்  துறையின் அறிக்கை இன்னமும் கிடைக்கவில்லை. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது. ஆகையால், முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென கோரப்பட்டது. 


மனுதாரர் தரப்பில், " பெற்றோரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு, பதிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. விடுதியில் பூச்சி மருந்து எளிதாக எவ்வாறு கிடைத்தது? மாணவி படிப்பில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு அவருக்கு வேலையும், தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. தஞ்சை காவல் கண்காணிப்பாளர், மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தவில்லை என ஊடகங்களில் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஊடகங்களில், "மதம் மாற கட்டாயப்படுத்தப்படவில்லை"என தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ விசாரணையின் திசையை மாற்றும் விதமாக உள்ளது. ஆகவே வழக்கை விசாரிக்கும் காவல்துறை மீதான நம்பிக்கை குறைந்துள்ளது." என வாதிடப்பட்டது.


அரசுத்தரப்பில், "15ஆம் தேதி அவரை பரிசோதித்த அரசு மருத்துவரே ஸ்கேன் மூலமாக கண்டறிந்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து நீதித்துறை நடுவர் முன்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. முத்துவேல் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை. அவர் ஒத்துழைத்தாலாவது எத்தனை வீடியோ எடுக்கப்பட்டது? எத்தனை செல்போன்களில் பதியப்பட்டது? யார் யாருக்கு பகிரப்பட்டது என்பது தெரியவரும். வீடியோவை மாணவியின் இறப்பிற்கு பின்பு பரப்புவதற்கு என்ன காரணம்? தமிழகத்தில் பிரச்சனையை உருவாக்குவதற்காகவே. உண்மையில் நீதியை விரும்பியிருந்தால், வீடியோவை எடுத்த அன்றே பரப்பியிருக்கலாமே? என கேள்வி எழுப்பப்பட்டது" என  வாதிடப்பட்டது.


திரு இருதய அன்னை சபை தரப்பில், " சிறந்த மாணவியை இழந்துள்ளோம். மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையை கருத்தில் கொண்டு ரகசிய அறிக்கையாக சில விபரங்களைத் தாக்கல் செய்துள்ளோம். கடந்த 160 ஆண்டுகளாக கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. பல மில்லியன் குழந்தைகள் எங்களின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். அவர்களில் பலர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆசிரியர்களும் வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் இந்த மாணவியின் மரணம் மதமாற்றத்திற்கு வற்புறுத்தியதன் காரணமாகவே நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அரசியலாக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கிற்கு பின்னர் மாணவி பள்ளிக்கு  வராத நிலையில்,  பள்ளியே அவருக்கான கட்டணத்தை செலுத்தி மீண்டும் பயில வைத்தது. மாணவியின் கல்வி மற்றும் மருத்துவ செலவு முழுமையாக பள்ளியை நடத்திய சகோதரிகளாலேயே பார்க்கப்பட்டது. ஆனால் அவரது சித்தி அந்த மாணவியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தினார். அது குறித்து விரிவாக விளக்க விரும்பவில்லை. தவறு செய்தவர்கள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அரசியல் காரணத்திற்காகவே இதில் எங்கள் மீது அவதூறு பரப்பப்படுகிறது" என வாதிடப்பட்டது.


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக இன்று பட்டியலிடப்படாத நிலையில், அவசர வழக்காக எடுத்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் நகல் கிடைத்த பின்னர் கூடுதல் விவரங்கள் தெரியவரும்