தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சொத்துப்பிரச்னையில் 2வது மனைவியை கொலை செய்த கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் சந்தை பகுதியை சேர்ந்த பாலன் (45). இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். தற்போது, உதயசூரியபுரத்தில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் என்ற கடைகளை நடத்தி வருகிறார்.

பாலன் பா.ஜ., பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளராக பதவி வகித்தார்.  கடந்த 2004ம் ஆண்டு ராஜி என்பவரை பாலன் திருமணம் செய்துள்ளார். பாலனுக்கு கபிலன் (20) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

இந்நிலையில், கொண்டிக்குளம், சர்கார் தோப்பு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சரண்யா (38), மதுரை செல்லுாரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருடன் திருமணமான நிலையில், மதுரையில் வசித்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு சண்முகசுந்தரம் இறந்துவிட்டார். அதன்பிறகு பாலனுடன், சரண்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பாலன், சரண்யாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.

சரண்யாவிற்கு சாமுவேல் (15), சரவணன் (13) என்ற இரண்டு மகன் உள்ளனர். பாலன், சரணவிற்கு, பா.ஜ., மகளிரணியில் பொறுப்பு வாங்கிக் கொடுத்தார். 

இதையடுத்து மதுரையில் ஏற்பட்ட பிரச்சனையால் சரண்யா தனது மகன்களுட்ன், பாலனும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு,  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்திற்கு வந்து  வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு, பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் கடைகளை பூட்டி விட்டு டூ வீலரில் வீட்டிற்கு சென்று விட்டனர்.

சரண்யா கடைத்தெருவில் பால் வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டு இருந்தார். அப்போது, அவரை மர்மநபர்கள் வழிமறித்து, கழுத்தில் வெட்டியுள்ளனர். இதில் சரண்யாவின் தலை தனியாக துண்டித்து விழுந்துள்ளது.   உடன் அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று காலை பாலனின் முதல் மனைவியின் மகனான மேலுாரை சேர்ந்த கபிலன் (20), அவரது நண்பரான குகன் (20) மற்றும் கொண்டிக்குளம் சர்கார்தோப்பு பகுதியை பார்த்திபன் (20) ஆகிய மூவரும், மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 6ல் ஆஜராக முயன்றனர்.

அவர்களை நீதிபதி உத்தரவின் பேரில், மதுரை அண்ணா நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று மூன்று பேரையும் தங்களின் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். 

முதற்கட்ட விசாரணையில், பாலன் கழுகுபுலிக்காட்டில் சுமார் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் இடம் ஒன்றை, வாங்கி தனது முதல் மனைவி மகனான கபிலன் பெயரில் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். இது குறித்து சரண்யாவுக்கு தெரியவர, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

உடனே பாலன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கபிலன் அவரது நண்பரான குகன் ஆகிய இருவரையும், பார்த்திபன் வீட்டில் தங்க வைத்து, சரண்யாவை கொலை செய்ய ஏற்பாடு செய்தது தெரியவந்தது.  தொடர்ந்து பாலனையும் போலீசார் கைது செய்தனர்.  இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.