5 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செயத 29 வயது இளைஞரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.


80 வயது மூதாட்டியும் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார். 5 வயது பெண் குழந்தையும் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார். பார் போற்றும் பாரத தேசத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்போது தான் உறுதி செய்யப்படும். இந்தக் கேள்வி நீண்டு கொண்டே இருக்கிறது.


5 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செயத 20 வயது இளைஞரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் தான் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. தானே மாவட்டம் ராம்நக பகுதியில் வசிக்கும் 5 வயது குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த 20 இளைஞன் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். மிட்டாய் தருவதாக ஏமாற்றி சிறுமியின் வீட்டினுள் நுழைந்த அந்தக் காமக் கொடூரன் சிறுமியை வன்புணர்வு செய்துள்ளான். இச்சம்பவம் தொடர்பாக நேற்று நவம்பர் 14 (குழந்தைகள் தினம்) அன்று தானே மாவட்டம் சாந்தி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவானது. குழந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணை, மருத்துவப் பரிசோதனைகள் அடிப்படையில் அந்த இளைஞன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இளைஞன் தலைமறைவாகிவிட்டதால். அவனைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.




போக்ஸோ சட்டம் அறிவோம்:


இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(The protection of children from sexual offense(pocso) Act 2012). இந்த சட்டம் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14-ஆம் தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது.


இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.


18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்,வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இச்சட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடியவேண்டும்.  


இச்சட்டத்தின் படி, மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல்துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.