தெலுங்கானாவில் பெற்றோர் பேச்சைக்கேட்டு காதலை முறித்த காதலியை காதலன் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் மானாஜிபேட்டை சேர்ந்தவர் 21 வயதான சாய்பிரியா. இவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியின் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் ஸ்ரீசைலன் என்ற நபரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 


இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாய்பிரியா தான் ஸ்ரீசைலன் என்ற நபரை காதலித்து வருவதாகவும், தன்னையும் அவரையும் சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த  சாய்பிரியாவின் பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, அந்த நபருடன் பேசுவதை நிறுத்துமாறு எச்சரித்துள்ளனர். 


தொடர்ந்து, சாய்பிரியாவின் பெற்றோர்கள் ஸ்ரீசைலனை அழைத்து இனிமேல் எங்களது பெண்ணை பார்க்கவோ, பேசவோ கூடாது என எச்சரித்துள்ளனர். தொடர்ச்சியாக சாய்பிரியாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ஸ்ரீசைலன் பிரியாவின் பெற்றோரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. 


இந்தநிலையில், கடந்த 5 ம் தேதி சாய்பிரியாவிற்கு ஸ்ரீசைலன் போன் செய்து, கடைசியாக உன்னிடம் மனம்விட்டு பேச வேண்டும். அதன்பிறகு உன்னை ஒருபோது தொந்தரவு செய்யமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சாய்பிரியாவும் ஸ்ரீசைலனுடன் பைக்கில் சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் பயந்துபோன பிரியாவின் பெற்றோர்கள் தேடி அலைந்துள்ளனர். அவரது போனுக்கு கால் செய்தாலும் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. 


விடிய விடிய தேடிய நிலையில் பிரியாவின் செல்போனிலிருந்து அவரது தந்தைக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், “ அப்பா, நீங்கள் என் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஸ்ரீசைலனுடனான காதலை முறித்துவிட்டேன். தற்போது மற்றொருவரை காதலிக்கிறேன் அவரை திருமணம் செய்ய ஹைதராபாத் சென்றுள்ளேன். அதனால் என்னை தேட வேண்டாம் என அனுப்பியுள்ளார். 


இந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியா பெற்றோர் உடனடியாக மயிலார்தேவருபள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சாய்பிரியாவின் செல்போன் சிக்னலை தொடர்ந்து கண்காணித்தது வந்தனர். மேலும், சந்தேகத்தின்பேரில் ஸ்ரீசைலனை நேற்று முன்தினம் பிடித்து தீவிரமாக விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. 


வாக்குமூலம்: 


அதன்படி வாக்குமூலம் அளித்த ஸ்ரீசலன், ” எனது பேச்சை நம்பி வந்த சாய்பிரியாவை பைக்கில் முசாபேட்டா மண்டலம் கந்துரு கிராமம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றேன். அங்கு அவரிடம் மீண்டும் என்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தினேன். தொடர்ந்து அவள் சம்மதிக்காததால் ஆத்திரத்தில் பிரியாவை பாலியல் வன்கொடுமை செய்தேன். இதனை போலீசுக்கு தெரிவிப்பதாக சாய்பிரியா கூறியதால் அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து தனது உறவினர் சிவா உதவியுடன் அருகில் இருந்த கால்வாயில் புதைத்தேன்” என தெரிவித்தார். 


இதையடுத்து கால்வாயில் புதைக்கப்பட்ட சாய்பிரியாவின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஸ்ரீசைலனையும், அவனுக்கு உதவி செய்த சிவாவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.