தாம்பரம் அருகே கல்லூரி மாணவர்  ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சிகிச்சை பலனின்று இன்று அதிகாலை உயிரிழந்தார்.

தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற   இளைஞர்


 

தாம்பரம் (Tambaram News): சென்னை தாம்பரம் அடுத்த திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் உதயா பள்ளிகரனையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மாலை  சிட்லபாக்கம் சேது நாராயணன் தெருவில் உதயா தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் உதயா வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அந்த மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினர். இதனால் தன்னை காப்பாற்றி கொள்வதற்காக அருகில் இருந்த குடியிருப்புக்குள் உயிர் பயத்தில் ஓடியுள்ளார்.  அங்கும் உதயாவை விடாமல் துரத்திச் சென்ற அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டினர்.



மருத்துவமனையில் அனுமதி


உதயா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து கதறி உள்ளார். உதயாவின் கதறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த உதயாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மறுபுறம் அந்த மர்ம கும்பல் உதயாவை வெட்டி வீழ்த்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. பலத்த காயம் என்பதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. 

காவல் நிலையத்தில்  சரண்


இதற்கிடையே சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சேலையூர் உதவி ஆணையர் கிறிஸ்டி ஜெயசீல்-யிடம் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மப்பேடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் நரேஷ் (24), மப்பேடு , புத்தூர் விரிவு பகுதியை சேர்ந்த  தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் கிருஷ்ணா (19) என்ற கல்லூரி மாணவர் மற்றும் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வரும்  சாந்தகுமார்  என்பதும் தெரியவந்துள்ளது.



 கொலை வழக்காக மாற்றம்


மேலும் நடத்தபட்ட விசாரணையில் உதயா மூன்று நாட்களுக்கு முன்பு வாகனம் நிறுத்துவதற்கு ஏற்பட்ட தகராறில் நரேசை தாக்கியதாகவும் இதற்கு பழி வாங்குவதற்காக தனது நண்பர் கல்லூரி மாணவர்களான கிருஷ்ணா மற்றும் சாந்தகுமார்  ஆகியோருடன்  சேர்ந்து கஞ்சா போதையில் உதயாவை நரேஷ் மற்றும் கிருஷ்ணா அரிவாளால் வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்தநிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதயா சிகிச்சை பலனளிக்காமல், இன்று அதிகாலை  உயிரிழந்தார். மூன்று பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வழக்கு சம்பந்தமான மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.




 பின்னணியில் கஞ்சா ?


இளைஞர்கள்கிடையே சாதாரணமாக நடைபெற்ற மோதல் கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் கஞ்சா போதை தான் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் கட்டுக்கடங்காத வகையில்,  கஞ்சா வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறையினர் சரியாக கையாளுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நெடிய காலமாக உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சாவிற்கும் இடம் தெரியும் பொழுது  காவல்துறைக்கு அது தெரியாதா ? கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை ஏன்    கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.