சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் மாநகர அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் சுவேதா (25) தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக படித்து வருகிறார்.




 

இந்த நிலையில் சுவேதா படித்துவரும் தாம்பரம் தனியார் கல்லூரி அருகே அவரும் அவரின் காதலன் திருக்குவளை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு அவரும் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.



 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சேலையூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் சுவாதி என்ற மென்பொருள் பொறியாளர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இதே போன்றதொரு சம்பவம் சென்னையில் மீண்டும் நிகழ்ந்துள்ளது.