"தீரன் அதிகாரம் எண் ஒன்று" திரைப்படத்தின் உண்மை சம்பவம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சேலத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் சென்னையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்தனர். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவரது வீடு சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அதிகாலை அவரது வீட்டிற்குள் கொடூர கொள்ளை கும்பல் ஒன்று புகுந்தது. காவலாளி கோபாலை கொன்று விட்டு, வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் தாளமுத்து நடராஜனை துப்பாக்கியால் அடித்து கொலை செய்தது.


பின்னர் வீட்டில் இருந்த சுமார் 200 பவுன் தங்க நகைளை கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வடமாநிலத்தை சேர்ந்த "பவாரியா" என்ற கொள்ளை கும்பல் இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இக்கும்பல் 2005 ஆம் ஆண்டு திருவள்ளூர் பெரியபாளையம் முன்னாள் அமைச்சர் சுதர்சனம் உட்பட தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு கொண்டவர்கள் என்பது தெரியவந்தது.


இதையடுத்து போலீஸ் அதிகாரி ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நாட்களில் அவர்களை சுற்றிவளைத்த காவல்துறையினர் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள், மற்றவர்கள் கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். பவாரியா கும்பல் தலைவனான ஓம் பிரகாஷ், அசோக், ராகேஷ் குண்டு, ஜெயில்தார்சிங், பப்லு, பீனாதேவி, சந்து ஆகிய 7 பேரை கைது செய்தனர். 



இதேபோன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் "பவாரியா" கும்பலின் தலைவன் ஓம் பிரகாஷ், அசோக், ராகேஷ் குண்டு, ஜெயில்தார் சிங், ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் ஓம் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டார். இதில் ஓம்பிரகாஷ் மருமகன் ஜெயில்தார்சிங், மனைவி பீனாதேவி, சகோதரி சந்து மற்றும் பப்லு ஆகியோர் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாகி விட்டனர். இவர்களுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்டும் பிறப்பித்திருந்தது.


இந்த கொலை சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வழக்கை விரைந்து நடத்தும் வகையில் உத்தரவிட்டார். இந்நிலையில் ஓம் பிரகாஷின் மருமகன் ஜெயித்தார் சிங் சென்னையில் பதுங்கியிருப்பதாக கடந்த 2022 ஆம் ஆண்டு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேலம் தனிப்படை காவல்துறையினர் சென்னை விரைந்தனர். தேனாம்பேட்டையில் வைத்து ஜெயில்தார்சிங்கை கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். 



இதில் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் சேலம் மத்திய சிறையில் தற்போது அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய 4 பேரும், சென்னை புழல் சிறையில் மீதமுள்ளவர்கள் உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதிட்டு வருகிறார். இதில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிவடைந்து விட்டது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டதில் 2 பேர் தங்களது பக்கமும் சாட்சிகள் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் மனு போட்டுள்ளனர்.


இதனால் இந்த வழக்கை வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். 22 ஆண்டுகளுக்குப் பின்னர் பவாரியா கும்பலை சேர்ந்தவர்கள் தங்களிடம் சாட்சியுள்ளதாக கூறுவது இந்த வழக்கில் புது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.