தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குட்டூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் துரைசாமி மற்றும் அவருடைய மனைவி கோசலை. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் தனித்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் அவர்களது சடலத்திற்கு அருகில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்ததை அடுத்து போலீசார் அந்த இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று எண்ணி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


ஆனால் பிரேத பரிசோதனையில் துரைசாமி மற்றும் அவரது மனைவி கோசலை ஆகிய இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டதால் இறக்கவில்லை என்றும் மாறாக அவர்கள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமானது. இதனை அடுத்து அந்த தம்பதியின் மகன் ஆனந்தன் என்பவரிடமும் ஆனந்தனின் மகன்கள் சக்திவேல் மற்றும் மோகன்குமார் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சொத்திற்காக பெற்ற தாய் தந்தையை மகன் மற்றும் பேரன்களே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் தெரியவந்துள்ளது. 


விசாரணையில்..


இந்த கொலை சம்பவம் குறித்து துரைசாமியின் மகன் ஆனந்தன் மற்றும் அவரது மகன்கள் சக்திவேல் மற்றும் மோகன்குமாரிடன் விசாரித்தபோது, தந்தை துரைசாமிக்கு 10 ஏக்கர் நிலம் மற்றும் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும், அதனை தனது சகோதரிகளுடன் பங்கிட மனமில்லாமல் தானும் தனது மகன்களும் பங்கிட்டுக்கொள்ள நினைத்தாகவும் அவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தாய் கோசலை மற்றும் தந்தை துரைசாமி ஆகிய இருவரையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு போலீசாரை திசைதிருப்ப சடலங்களில் அருகில் பூச்சிக்கொல்லி பாட்டிலை போட்டதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். தற்போது மகன் ஆனந்தன் மற்றும் அவரது மகன்கள் சக்திவேல் மற்றும் மோகன்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. 


சொத்திற்காக பெற்ற தாய் தந்தையை இரக்கமின்றி சொந்த மகன் மற்றும் பேரன்களே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் மனிதனை மிருகமாக மற்றும் என்ற கூற்றை இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.