ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை உலகம் முழுவதும் ஒளிபரப்பும் உரிமையை ’ஸ்டார் டி.வி ‘ எனும் தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை  அனுமதி பெறாமல்  இலவசமாக பார்க்கும் வகையில் ( டி.வி ஆப் எனும் ) ஆப் ஒன்று உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ஏராளமானோர் ஐ.பி.எல்., போட்டிகளை இலவசமாக கண்டுகளித்திருந்தனர். மேலும் இதற்காக பல இடங்களில் விளம்பரங்களும் பெறப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்து அறிந்த ஐ.பி.எல்., ஒளிபரப்பு உரிமையை பெற்ற  நிறுவனத்தின் சார்பில்  ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியை சேர்ந்த கடாரம் துப்பா (36) என்பவர்  ஐதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.




 

இந்த புகாரின் அடிப்படையில் ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு  தொடர்ந்து நடத்திய விசாரனையில் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பிள்ளையார் கோயில் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகனான மென் பொறியாளர் ராமமூர்த்தி (29) என்பவர் அனுமதி பெறாமல் தனி செயலியின் மூலம் ஐ.பி.எல்., போட்டியை ஒளிபரப்பியதாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து  சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ரவீந்தர் தலைமையில் காவலர்கள் ராமமூர்த்தியை கைது செய்து, சிவகங்கை ஜே.எம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஹைதராபாத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். ராமமூர்த்தி சென்னையில் தனியார் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் என்பதும் கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது. ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் (சி.ஆர் 1685 / 21 யூ / எஸ் 66ஆர்/ டபள்யூ 43ஐ.டி.ஏ ஆக்ட் & 63,65) உள்ளிட்ட வழக்குகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

 

இணையம் மூலம் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வரும் சூழலில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  ஆப் மூலம் சட்ட விரோதமாக கிரிக்கெட் ஒளிபரப்பு செய்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையம் மூலம் பணம் சம்பாரிப்பதாக நினைத்துக் கொண்டு சட்ட விரோதமாக செயலில் ஈடுபடும்  நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.