திருடச்சென்ற வீட்டுக்குள் பெண்ணை ரசித்துக்கொண்டிருந்த திருடன் வசமாக சிக்கிய பின் வலிப்பு வந்ததுபோல் நாடகமாடி தப்பிக்க முயற்சித்ததும், அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த கலகலப்பு சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் இரயில் நிலையம் அருகில் உள்ள சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் இரவு மின்சாரம் இல்லாததால் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். 



அப்போது காற்று வராததால் திடீரென விழித்து பார்த்த போது அருகில் யாரோ ஒருவர் நின்று கொண்டிருப்பது போல இருந்துள்ளது. அதன்பின் திருடன் என்ற சுதாரித்துக் கொண்ட பெண், "திருடன் திருடன்" என்று கூச்சலிட்டு உள்ளார். உடனடியாக வீட்டிலிருந்து வெளியே சென்று தப்பிக்க முயன்றவரை அப்பெண்ணின் கணவர் மற்றும் அருகில் வசிப்பவர்கள் அவரைத் துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர். அவர்களிடம் வசமாக மாட்டிய உடன் வலிப்பு வந்தது போல் நடித்து தப்பிக்க முயன்று உள்ளார். இதனையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 



இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் கொடுத்ததை அடுத்து அவரைப் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவன் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள நீர் முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்த சின்ராசு என்பதும் அவர் மீது 17 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு, சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் திருநங்கை வீட்டில் உள்ளே நுழைந்து தகராறு செய்து, அவர்களிடமிருந்து தப்பிக்க மாடி மாடி ஆக ஓடிச்சென்று தப்பியுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இந்நிலையில் சிறையிலிருந்து வந்த சின்ராசு தற்போது மீண்டும் பெண் ஒருவரின் வீட்டுக்குள் சென்று மாட்டிக் கொண்டு வலிப்பு வந்தது போல் நடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சின்ராசவை சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சின்ராசவை சிறையில் அடைத்துள்ளனர். திருடச் சென்ற இடத்தில், பெண்ணின் அழகில் மயங்கி ரசித்து சிக்கிய திருடனின் செயல், அப்பகுதியில் அதிர்ச்சியுடன் கலந்த சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


குசேலன் படத்தில் வடிவேலு, தனது மனைவியை ஜன்னலுக்கு வெளியே இருந்து ரசிப்பார். அதைப் பார்த்து போலீஸ் உள்ளிட்ட பலரும் அங்கு கூடுவார்கள். அந்த காட்சியைப் போலவே, திருடச் சென்ற இடத்தில் திருடும் வேலையை பார்க்காமல், பெண்ணை பார்த்து ரசித்து சிக்கிய சம்பவம் , உண்மையில் அபூர்வமானது தான்.