சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மான் கறி விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் உள்ள ஆவணியூர் புறப்பட்ட சாலை சந்திப்பில் இருவர் சொகுசு காரில் வந்து மான் கறி விற்பனை செய்து வருவதாக எடப்பாடி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எடப்பாடி காவல்துறையினர், அங்கு சந்தேகபடும் படியாக சொகுசு காருடன் நின்றிருந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்ய முயற்சித்தனர். 



அப்போது காவல்துறையினரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், காருடன் இருந்த மற்றொரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் விசாரணையில் பிடிபட்ட நபர் கடலூர் மாவட்டம், சிறுபாக்கம், வடக்கு தெரு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் தானுவேல் என்பதும், அவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான பழனி என்பவருடன் சேர்ந்து, கடலூர் மாவட்டம் நயினார்பாளையம் வனப்பகுதியில் வேட்டையாடிய 2 மான்களை கறியாக வெட்டி, சொகுசு கார் மூலம், எடப்பாடி அடுத்த ஆவணியூர் பகுதியில் கிலோ ரூ.400க்கு விற்பனை செய்து வந்ததாக, விசாரணையில் தெரிய வந்தது. 



இதுகுறித்து மேட்டூர் வனசரக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வன சரக அலுவலர் சிவானந்தம் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து, மான் கறி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்து அவர் பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்ததுடன் அவரிடம் இருந்த மான் கறியை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மான் கறி விற்பனையில் ஈடுபட்ட நபரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தப்பி ஓடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். எடப்பாடி பகுதியில் மான் கறி விற்பனை செய்த நபர்கள் பிடிபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.