சேலம் மாநகர் குமாரசாமிபட்டி பகுதியில் மாநகர காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. இங்கு சேலம் மாநகர காவல் துறையினரின் ரோந்து வாகனங்கள், காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் கனரக வாகனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனம் நேற்று முன்தினம் இரவு காணாமல் போனதாக தகவல் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி கேமராவினை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அரசு சின்னம் வைத்த வாகனம் ஒன்று இரண்டு நாட்களாக குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து சென்றது பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் அரசு வாகனத்தின் என்னை வைத்து ஆய்வு செய்தபோது அந்த எண்ணில் எந்தவித வாகனமும் பதிவாகவில்லை என தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வாகனத்தை காவல்துறையினர் தேடி வந்தனர். 



இந்த நிலையில் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் பகுதியில் அரசு சின்னம் பதித்த வாகனம் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து சென்று போலி அரசு வாகனத்தை சுற்றி வளைத்து பிடித்தனர். வாகனத்தை ஓட்டி வந்த சேலம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். குடிபோதையில் இருந்த மதன்குமார் காவல் துறையினரிடம் விதண்டாவாதமாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் காவல்துறை வாகனத்தை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில் சேலம் சூரமங்கலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தை அஸ்தம்பட்டி காவல் துறையினர் மீட்டனர். இதனையடுத்து மதன்குமார் வேறு ஏதாவது வாகனத்தை திருடிய உள்ளாரா? என்பது குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் வேறு எங்காவது மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 



இதற்கிடையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேளாண்மைத்துறை அதிகாரி என கூறி ரூபாய் 1.65 லட்சம் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. தாரமங்கலம் பஸ் நிலையம் பின்பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருபவர் மஞ்சுநாத். இவர் தாரமங்கலம் காவல்துறையினரிடம் கொடுத்துள்ள புகாரில், மதன் குமார் என்பவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மைத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறி வண்டிக்கு டீசல் அடித்தார். இவ்வாறு ரூபாய் 1.65 லட்சம் வரை பணம் செலுத்த வேண்டும். பணம் கேட்கும் போது கலெக்டர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு கூறி ஏமாற்றினார். தொடர்ச்சியாக கேட்டபோது தகராறு செய்ததுடன் மிரட்டினார் என கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதன்குமார் பல்வேறு இடங்களில் பலவிதமாக மோசடி செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.