திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த உள்ள சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் வயது (30). இவர் விவசாய கூலி தொழிலாளி, இவருடைய மனைவி அமுதா வயது (27). இவர்களது மகன்கள் நிலவரசு வயது (5), குறளரசு வயது (4), மகள் யாஷினி 7 மாத குழந்தை, இதில் நிலவரசு சாத்தான் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் அமுதா தனது மகன்களான நிலவரசு, குறளரசு மற்றும் 7 மாத கைக்குழந்தையான யாஷினி ஆகிய மூன்று நபர்களையும் அழைத்துக் கொண்டு தென்பெண்ணை ஆற்றின் கரைக்கு வந்தார். தற்போது க மழை பொழிந்ததால் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் பெருக்கெடுத்து சென்று கொண்டிருந்தது. அங்கு அமுதா திடீரென தனது 3 குழந்தைகளையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றுக்குள் குதித்துள்ளார். பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் 3 குழந்தைகளும், அமுதாவும் மூழ்கினர். 


 





 


அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து அமுதாவையும் மூன்று குழந்தைகளையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில் மூன்று குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அமுதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ மனையில் அமுதாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மூன்று குழந்தைகளின் உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது


 




 


தகவல் அறிந்து வந்த வாணாபுரம் ஆய்வாளர் தனலட்சுமி, துணை ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் மூன்று குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரமேஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த தற்கொலை முயற்சி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அமுதாவுக்கும் அவரது கணவர் பரசுராமனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்ததாக தெரியவந்தது.


 




 


அதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேப்பூர்செக்கடி பகுதியில் உள்ள அமுதாவின் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்ற பரசுராமன் அங்கேயே தங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடும் மனஉளைச்சலில் இருந்த அமுதா, பள்ளியில் இருந்த மூத்த மகன் நிலவரசுவை பாதியிலேயே வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த மற்ற 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு தென்பெண்ணை ஆற்றுக்கு சென்று மூன்று குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என தெரியவந்தது. இருப்பினும், குடும்ப பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உறவினர்கள் மட்டுமின்றி கிராம மக்களை மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண