சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி ஒடுவன்காடு பகுதி சேர்ந்த ராஜா என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் நவீனா (17) என்ற மகளும், பத்தாம் வகுப்பு படிக்கும் சுகன் (15) என்ற மகனும் உள்ளனர். இருவரும் குள்ளப்ப நாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் பள்ளி முடித்துவிட்டு தந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒடுவன்காடு பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துள்ளனர். இதில் ராஜாவிற்கும் வெட்டு காயங்கள் ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த கொலை சம்பவம் தொடர்பாக பனமரத்துப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கொலைச் சம்பவம் நில தகராறு காரணமாக செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பக்கத்து நிலத்தின் உரிமையாளர் தனசேகர் என்பவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை காவல்துறையினர் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தையின் கண் முன்னே இரண்டு குழந்தைகள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.