காரில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை... கொலைக்கான காரணம் என்ன?

ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பிரபல ரவுடி ஜான் மனைவி கண் முன்னே வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Continues below advertisement

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான். இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஜான் மீது பதிவான வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்று சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். நேற்று காலை அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ஜான் கையெழுத்து போட்டுவிட்டு அவரது மனைவியான வழக்கறிஞர் சரண்யாவுடன் திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்திற்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். 

Continues below advertisement

பிரபல ரவுடி கொலை:

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்டம் நசியனூர் முள்ளம்பட்டி அருகே சென்றபோது ஜான் காரை பின் தொடர்ந்து மற்றொரு காரில் ஒரு கும்பல் வந்தது. திடீரென அந்த கும்பல் ஜான் காரின் பின்புறத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினர். பின்னர் காரில் இருந்து இறங்கிய நான்கு பேர் கொண்ட கும்பல் ஜான் சுதாரிப்பதற்குள் காரில் கண்ணாடியை அடித்து உடைத்து விட்டு உள்ளே இருந்த ஜானின் தலை, கழுத்து, கைகளில் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களால் கொடூரமாக வெட்டினர். 

பட்டப் பகலில் அரிவாள் வெட்டு:

தாக்குதலில் இருந்து தப்பிக்க ஜான் காரின் பின்புறம் சீட்டிற்கு சென்றார். ஆனாலும் அந்த கும்பல் ஜானின் மனைவி கண் முன்னே அவரை சரமாரியாக வெட்டியது. காரில் அருகில் அமர்ந்திருந்த ஜான் மனைவி சரண்யா காரில் இருந்து இறங்கி மர்ம நபர்கள் கணவரை வெட்டுவதை தடுக்கும் முயன்றார். அப்போது சரண்யாவுக்கும் கையில் வெட்டு விழுந்தது. இதனால் சரண்யா அங்கிருந்து சென்று விட்டார். இதன் பின்னர் அந்த கும்பல் ஜானை காருக்குள் 4 புறமும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் ஜான் காருக்குள் பரிதாபமாக உயிரிழந்தார். ஜான் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய கொலையாளிகள் பின்னர் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர். 

மடக்கி பிடித்த பொதுமக்கள்:

கார் சிறிது தூரம் சென்றதும் பழுதடைந்தது. இதையடுத்து கொலையாளிகள் காரை விட்டு கீழே இறங்கி தப்பியோட முயன்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கொலையாளிகள் மூன்று பேரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து சித்தோடு போலீசாருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்துறையினர் கையில் வெட்டுக்காயம் அடைந்த ஜானின் மனைவி சரண்யாவை மீட்டு ரசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

துப்பாக்கி சூடு:

கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட கொலையாளிகளான சேலம் கட்சி பாளையத்தை சேர்ந்த பூபாலன், சரவணன், சதீஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். காவல் நிலையம் செல்லும் வழியில் மூன்று பேரும் காவல் துறையினரை தாக்கி தப்பியோடினர். இதையடுத்து சித்தோடு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான காவல்துறையினர் மூன்று பேரையும் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கொலையாளிகள் தாக்கியதில் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் காவலர் யோகராஜ் ஆகிய இருவர் பலத்த காயமடைந்தனர். இதை எடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

ஈரோட்டில் பயங்கரம்:

ஜான் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திகேயன் என்பவருக்கு இடது கையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து கார்த்திகேயன் வலியால் அலறி துடித்ததோடு அங்கிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த பேக்கரி ஒன்றில் பதுங்கினார். அவரை காவல்துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பட்டப் பகலில் சினிமா பாணியில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜான் கொலை வழக்கில் இதுவரை 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இருவர் இன்று காலை ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

4வது கொலை... பழிக்கு பழி:

சேலம் கிச்சிப்பாளையத்தில் பழிக்கு பழியாக நடக்கும் கொலையில் இது நான்காவது கொலையாகும். முதலில் மாநகராட்சி தூய்மை பணியாளரான விஜயகுமார் கொலை செய்யப்பட்டார். அதற்குப் பழிவாங்கும் வகையில் நெப்போலியன் படுகொலை செய்யப்பட்டார். நெப்போலியன் கொலைக்கு பழிவாங்கும் வகையில் பிரபல ரவுடி செல்லதுரை கிச்சிப்பாளையம் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தற்போது செல்லதுரை கொலைக்கு பழிவாங்கும் வகையில் ரவுடி ஜான் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. செல்லதுரையை கொலை செய்ய பிரபல கூலிப்படை தலைவர்களை அழைத்து வந்தது ஜான். எனவே ஜானை தீர்த்து கட்ட வேண்டும் என்பதில் செல்லதுரை கூட்டாளிகள் உறுதியாக இருந்தனர். ரவுடி ஜான் கொலையில் செல்லதுரையின் மனைவிகள் இரண்டு பேருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola