வேலை வாய்ப்புத் தருவதாக கூறி சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் 650 இளைஞரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளது. தனியார் நிறுவன உரிமையாளரை கைது செய்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கிருஷ்ணகிரியில் கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்த பூவரசன் என்பவர் கேப்பிட்டல் பின்சர்வ் என்கிற தனியார் நிறுவனத்தில் தனது சுயவிவரப் விண்ணப்பத்தை வழங்கிவிட்டு சென்றுள்ளார். விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட தனியார் நிறுவனம் ஓரிரு தினங்களில் தங்களை அழைப்பதாக தெரிவித்துள்ளனர்.


 




அதன் பிறகு அந்த நிறுவனத்தின் சார்பில் ஆன்லைன் மூலமாக பூவரசனுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு பணி வழங்குவதாகவும் அதற்கு அலுவலக கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனம் தெரிவித்த அந்த தொகையை பூவரசன் செலுத்தியுள்ளார். அதன் பிறகே பூவரசனுக்கு பணி நியமன ஆணையை அந்த தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது. மூன்று மாதங்களாக அவர் அந்த நிறுவனத்தில் வீட்டிலிருந்த படியே பணியாற்றி வந்துள்ளார். ஆனால் அந்த நிறுவனம் கடந்த மூன்று மாதமாக பூவரசனுக்கு சம்பளம் கொடுக்காமல் நிறுவனம் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பூவரசன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு தலைமையிலான காவல்துறையினர் தனியார் கம்பெனியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


 




 


இந்த விசாரணையில் படித்து வேலையின்றி இருக்கும் இளைஞர்களை குறிவைத்து ஆசை வார்த்தைகள் கூறி வேலை வாய்ப்பு தருவதாக அவர்களிடம் போலியாக ஆன்லைனில் நேர்முகத் தேர்வுகள் நடத்தி அலுவலக கட்டணமாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையில் கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,சேலம் நாமக்கல், ஈரோடு ,கோயமுத்தூர் போன்ற மாவட்டங்களில் உள்ள சுமார் 650க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என சொல்லி மோசடி செய்து பணம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்ட கேப்பிட்டல் பின்சர்வ் நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ்ணகுமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வேலை வாய்ப்புத் தருவதாக இளைஞரிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் நூதன முறையில் பணம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.