தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான 2100 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.




மதுரை கீரைத்துறை காவல் நிலைய பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரை கீரைத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்த போது கஞ்சாவை தூத்துக்குடியை சேர்ந்த ஆரோன் என்பவரிடம் வாங்கியதாக கூறியுள்ளார். இதையடுத்து மதுரை கீரைத்துறை போலீஸாரை தூத்துக்குடியை சேர்ந்த ஆரோன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது சாத்தான்குளம் அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.




அதன்பேரில் மதுரை போலீஸார் 2 வேன்களில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சாத்தான்குளம் அருகே வேலன்புதுக்குளம் பகுதியில் உள்ள அந்த தோட்டத்துக்கு வந்து, உள்ளூர் போலீஸார் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாக்கு பைகளில் குவியல் குவியலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீஸார் இரவு விடிய விடிய எடை போட்டனர். மொத்தம் 2100 கிலோ கஞ்சா அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.




பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை சாக்கு பைகளில் கட்டி வேனில் ஏற்றி போலீஸார் நேற்று மதுரைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரையை சேர்ந்த 2 பேர், தூத்துக்குடியை பகுதியை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து மதுரை கீரைத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சாவை தோட்டத்தில் பதுக்கி வைத்து படகுகள் மூலமாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தமிழக காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் ஒரே இடத்தில் 2100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நேற்று முன் தினம் அப்பகுதி தோட்டம் ஒன்றில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் 3 மூட்டைகளில் 120 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் திருச்செந்தூரை அடுத்து உள்ள சாத்தான்குளம் பகுதியில் தோட்டத்தில் 2100 கிலோ மதிப்புள்ள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு அதை காவல்துறையினர் பறிமுதல் செய்து உள்ளதும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.