கேரளா மாநிலத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு  மோசடி புகார் ஒன்றை அளித்தனர். அதில் சாந்தினி என்ற பெண்  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,  “நெல்லை சந்திப்பில் சீதாபதி ராமசுதர்சன் என்பவருக்கு சொந்தமாக  ஹிந்துஸ்தான் அக்ரி லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தினால் ஐந்து ஆண்டுகள் கழித்து இருமடங்காக திருப்பி கொடுக்கப்படும் என்று தனக்கு நன்கு அறிமுகமான அந்த நிறுவனத்தின் மேலாளர் சுரேஷ் என்னிடம்  தெரிவித்தார். 


 


 அதன் பேரில் அதை நம்பி தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் சுமார் ஒன்றரை கோடி வரை பணம் வசூல் செய்து மேற்கண்ட நிறுவனத்தில் கட்டினேன். பணம் கட்டும்போது ஐந்து வருடம் கழித்து  பணத்தை இருமடங்கு லாபத்துடன் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஆசைவார்த்தை கூறி, அதன் பின் தற்போது ஐந்து வருடம் முடிந்த பின்பு மேற்கண்ட நிறுவனத்தின் தலைவர் சீதாபதி ராமசுதர்சன் மற்றும் நிர்வாக இயக்குனர்களை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்ட போது பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வருகின்றனர்” என்று மனுவில் கூறியிருந்தார். மேலும் திட்டமிட்டு ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த சீதாபதி ராமசுதர்சன் மற்றும் அதன் நிர்வாக இயக்குனர்கள் மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரும்படியும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.




இது குறித்து வழக்கறிஞர் பேச்சிமுத்து கூறுகையில்,  “ஹிந்துஸ்தான் அக்ரி  நிறுவனத்தில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஐந்து வருடம் 60 லட்ச ரூபாய் செலுத்தினால் 5 ஆண்டுகள் கழித்து இருமடங்காக ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் தருவதாக கூறி கேரளாவில் பல கிளைகளை நிறுவி ஏழை மக்களிடம் பணம் வசூலித்து நம்பிக்கை மோசடி செய்து உள்ளனர்.  இங்கு வந்திருக்கும் பெண்கள் அனைவரும் முகவர்கள், தற்போது 30க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு வந்துள்ளனர். மேலும் சுமார் 1500 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவராக தகவல் அறிந்து வந்து கொண்டிருக்கின்றனர்.  இதுவரை 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மேற்கண்ட நிறுவனத்தில் செலுத்தியுள்ளனர். ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகும் பணத்தை கொடுக்காமல் அந்நிறுவனம் மோசடி செய்துள்ளது. எனவே ஹிந்துஸ்தான் அக்ரி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்டும்” என்று தெரிவித்தார். மோசடி செய்ததாக கூறப்படும் நபர்களில் ஒருவரும் பிரபல பஸ் நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது