எதுக்கு தான் பொறுமை இருக்க வேண்டும் என்றில்லாமல் போய்விட்டது. கொலை செய்ய வந்த இடத்தில் காத்திருக்க பொறுமை இல்லாமல், கிடைத்த நேரத்தில் ஒரு கொள்ளையை செய்து விடுவோம் என முடிவு செய்து, பரிதாபமாக சிக்கியுள்ளனர் ரவுடிகள். 

 

சென்னை பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவித் வயது 37. இவர் வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெரு பகுதியில் துணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரது கடைக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி  துணி வேண்டும் என்று கூறி துணி எடுத்து உள்ளனர். அதன் பிறகு 10,000 ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளனர். ஜாவித் பணம் தர மறுக்கவே கையில் இருந்த கத்தியை எடுத்து அவரை நோக்கி வெட்டி உள்ளனர். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டு கூச்சலிட்டு உள்ளார். உடனே அங்கு வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் செம்பியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.



தகவலின் பேரில் அங்கு சென்ற செம்பியம் போலீசார்  கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.  இதனையடுத்து மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் பதுங்கியிருந்த வியாசர்பாடி பி. வி காலனி பகுதியை சேர்ந்த கலை (எ) கலைச் செல்வன் 26. மாதவரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (எ) பச்சைப்பாம்பு (26) அயனாவரம் பகுதியைச் சேர்ந்த அஜய் (எ) ஜோதிகுமார் 20. புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தினகரன் (19) இவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து மூன்று பட்டா கத்திகள் மற்றும் 2 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில் வியாசர்பாடி பி.வி காலணி பகுதியில் 2 ரவுடி கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. 

அதில் ஒரு ரவுடி கும்பலை சேர்ந்த தொப்பை கணேசன் என்பவர், அதே பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்கு வருவதாக இருந்துள்ளது. இதை அறிந்த எதிர் கோஷ்டியினர், தொப்பை கணேசனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதற்காக நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்திகளுடன் அப்பகுதியிங் வந்து பதுங்கி இருந்துள்ளனர். தொப்பை கணேசன் வர தாமதமானதால், அவர் வரும் வரை அருகில் உள்ள துணிக்கடையில் நுழைந்து மிரட்டி பணம் பறிக்கலாம் என முடிவு செய்துள்ளனர். நலல போதையில் இருந்த அவர்கள், அதன் பின் துணிக் கடையில் சென்று தகராறு செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இதனையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.