ரூட் தல பிரச்சனை 


சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் ரயில் நிலையம் வரை செல்லும் மின்சார ரயிலானது கொரட்டூர் ரயில் நிலையத்தை நோக்கி சென்றது. அப்போது கொரட்டூர் ரயில் நிலைய நடை மேடையில் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் திடீரென கீழே கிடந்த கற்களை கொண்டும் கையில் வைத்திருந்த பொருட்களைக் கொண்டும் ரயிலில்  பயணித்த மாணவர்கள் மீது தூக்கி எறிந்தனர்.


ரயில் பயணிகளுக்கு இடையூறு


இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே மாறி, மாறி கையில் வைத்திருந்த பொருட்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், ரயிலில் பயணித்த பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. ரயிலின் கதவை மூடியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக இது குறித்து பொதுமக்கள் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கீழே கிடந்த கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.


விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பதும் ரூட் பிரச்சனை காரணமாக மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணித்த ரயில் மீது கற்களை கொண்டு வீசியது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சிறுவர் உட்பட , பச்சைப்பன் கல்லூரியை சேர்ந்த 10 மாணவர்களை பெரம்பூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதில் திருவள்ளூரை சேர்ந்த பாலா, விக்னேஷ், ராகேஷ் , பூபதி , சஞ்சய், உமாபதி விக்னேஷ் உட்பட 9 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.