விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தந்தை மீது கொடுத்த பாலியல் புகாருக்காக மகனையும் போலீசார் அதிகாலையில் அடித்து இழுத்துச் சென்ற நிலையில் தப்பி ஓடிய மகன் போலீஸ் விசாரணைக்கு பயந்தும் அவமானம் தாங்காமலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு நிலவுகிறது.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சூரப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (36). கூலி வேலை செய்து வரும் வெங்கடேசனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.


இந்நிலையில் வெங்கடேசனின் தந்தையான சம்பத் (65) மீது கீழ்செவளம்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜம் என்பவர் தன்னுடைய மகளை சம்பத் பாலியல் வன்கொடுமை செய்ததாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சம்பத் வீட்டிற்கு சென்ற செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி தலைமையிலான 5 பேர் கொண்ட போலீசார் சம்பத்தை கைது செய்த நிலையில் அங்கிருந்த அவருடைய மகன் வெங்கடேசனை வலுக்கட்டாயமாக அடித்து இழுத்து போலீஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர்.


இதனிடையே வெங்கடேசன் பாதி வழியில் போலீஸ் ஜீப்பில் இருந்து தப்பித்து ஓடிவிட்டதாக தெரிகிறது. ஆனால் இது குறித்து போலீசார் வெங்கடேசன் குடும்பத்தினருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் வெங்கடேசன் போலீஸ் விசாரணைக்கு பயந்தும் அவமானம் தாங்க முடியாமலும் வயல்வெளியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக  அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வெங்கடேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும்  அவரது உறவினர்கள் புகார் தெரிவித்து வெங்கடேசன் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அப்படி நீதி கிடைக்கவில்லை என்றால் உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.


இதனால் சூரப்பந்தாங்கல் கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த தற்கொலை சம்பவத்தில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் தவறு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் வளத்தி காவல்துறையினரும் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா அவர்களும் நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்டு தங்கள் மகன் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட வெங்கடேசன் தாயர் வளர்மதி கோரிக்கை வைத்துள்ளார்.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண