Ramanadhapuram crime: ராமநாதபுரத்தில் இளைஞருடன் இரவு நேரங்களில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததால், மனைவியை கணவன் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


மனைவியை கொன்று கணவன் தற்கொலை: 


ராமநாதபுரத்தில் மனைவியை கொன்றுவிட்டு, தன்னைத்தானே கத்தியால் குத்தி கணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு செல்போனால் வந்த வினையால், பதின் பருவத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் தங்களது பெற்றோரை இழந்துள்ளனர். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.  


செல்போனால் வந்த வினை..!


ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர், பன்னீர்செல்வம். கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சரண்யா (37) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அஜய் (16) என்ற மகனும், அக்சிதா (11) என்ற மகளும் உள்ளனர். இதனிடயே,  சரண்யா ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள பல் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அங்கு ஏற்பட்ட பழக்கத்தில், செல்போனில் ஒரு இளைஞருடன் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது பன்னீர்செல்வத்துக்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.


கடன் வாங்கி செலவு?


இதனிடையே, கணவரின் கண்டிப்பையும் மீறி சரண்யா கடன் வாங்கி செலவு செய்து வந்ததும்,  கணவன்-மனைவி இடையே பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் அண்மையில் ஏற்பட்ட தகராறில் பன்னீர்செல்வம், சரண்யாவை அடித்துள்ளார். இது காவல் நிலையம் வரை செல்ல, போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். ஆனாலும், இருவர் இடையேயான மனக்கசப்பு தொடர்ந்ததால், சரண்யா அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் பெரியவர்கள் சமரசம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். இதன் பின்னர் இரவு நேரத்தில் மட்டும் சரண்யா, போன் பேசுவதற்காக தந்தை வீட்டிற்கு தூங்க சென்று வந்ததாக கூறப்படுகிறது.


மனைவியை குத்திக் கொன்ற கணவர்:


பலமுறை கண்டித்தும் அந்த அடையாளம் தெரியாத இளைஞர் உடனான, செல்போன் பேச்சை மனைவி கைவிடவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மதுபோதையில் இருந்த பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மனைவி தூங்கி கொண்டிருந்த அறைக்கு சென்று,  சரண்யாவின் வாயைப் பொத்தி சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.  மனைவி உயிரிழந்ததை கண்டதும், நேராக தனது வீட்டுக்கு சென்ற பன்னீர்செல்வம் கத்தியால் தன் வயிற்றில் சரமாரியாக குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். நள்ளிரவில் தந்தையை காணாமல் எழுந்து பார்த்த சிறுமி அக்சிதா, வீட்டின் வெளியில் வந்து பார்த்தபோது வாசல் பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பன்னீர் செல்வத்தை பார்த்து அலறினாள்.


கணவன் பலி - போலீசார் விசாரணை:


சிறுமியின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த பன்னீர்செல்வத்தை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான புகார்களின்படி, சரண்யாவின் கொலை மற்றும் பன்னீர்செல்வத்தின் தற்கொலை தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மருத்துவ துறை சார்ந்த பணியில் உள்ள வாலிபர் ஒருவருடன் சரண்யா பழகி வந்ததாகவும், அவரை கைது செய்து விசாரித்தால் தான் மற்ற தகவல்கள் தெரிய வரும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.