கடந்த மாதம் சென்னை, கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ராஜகோபாலன் மனைவி சுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, “ மே 24-ந் தேதி முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரில் இந்திய தண்டனை சட்டம், போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாணவி அளித்த புகாரில் 2015ம் ஆண்டு 11ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம் என குறிப்பிட்டுள்ளார். அப்போது, இணையதள வகுப்புகளே இல்லாத நிலையில், பொய்யான குற்றச்சாட்டு இது. அதன்பின்னர், எவ்வித வழக்குகளும் இல்லாத நிலையில் என் கணவரை பாலியல் குற்றவாளி என குண்டர் சட்டத்தில் அடைத்தது சட்டவிரோதம்.

தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில், முழுமையாக உண்மையை கண்டறியாமல் செவி வழி தகவலில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை துன்புறுத்தியதாகவும், பெண்ணினத்திற்கு கண்ணியத்தை கெடுப்பதாகவும், போக்சோ குற்றம் எனவும் கூறும் குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக இருக்கிறது.

ஜூன் 24-ந் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தங்களுக்கு வழங்கியதில் தாமதிக்கப்பட்டு, ஜூலை 5-ந் தேதிதான் வழங்கப்பட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்றே ஆவணங்களை வழங்காதது சட்டவிரோதம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு குறித்து தமிழக அரசு உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர், புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் அமர்வு விசாரணையைத் தள்ளிவைத்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால், பள்ளி சார்பில் நடத்தப்பட்ட ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் ராஜகோபாலன் அரைகுறை ஆடைகளுடன் மாணவிகள் முன் தோன்றியது ஆதாரங்களுடன் வெளியானது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த காரணத்தால், அவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக அவர் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது. மேலும், அவர் மீது சுமார் 30 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு அளித்தனர். ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தில் அவர் மட்டுமின்றி மேலும் சில ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் வெளியில் வந்த பிறகு, சென்னையில் மேலும் சில பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக சில ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.