ஆபாசப்படம் தயாரிப்பு விவகாரத்தில் ஷில்பாவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மும்பை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா நேற்று கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவை ஜூலை 23 வரை போலீஸ் காவலில் வைக்கச் சொல்லி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் மும்பை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் சிறை வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் இது குறித்து மும்பை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், ஆபாசப்படம் தயாரிப்பு வழக்கில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அவரது மனைவியும், நடிகையுமான ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை. நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். ராஜ்குந்த்ராவால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன் வந்து புகாரளிக்கலாம். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.




முன்னதாக, ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக மும்பை போலீசார் ராஜ்குந்த்ராவை அதிரடியாக கைது செய்தனர். இந்த தகவலை மும்பை காவல் ஆணையர் ஹேமந்த் உறுதி செய்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், பிப்ரவரி 2021ம் ஆண்டு இது தொடர்பான வழக்கு பதியப்பட்டது. அதாவது ஆபாசப் படங்களை தயாரித்து அதனை சில ஆப்களுக்கு விற்பனை செய்வதாக புகார். அதன் விசாரணையில் சில சாட்சியங்கள் கிடைத்துள்ளன.


அதனடிப்படையில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலும் விசாரணை தொடர்கிறது என்றார்.கைது செய்யப்பட்ட ராஜ்குந்த்ரா மீது, மோசடி, பொது இடங்களில் ஆபாசமான செயலில் ஈடுபடுவது மற்றும் ஆபாச புத்தகங்கள் அல்லது இலக்கியங்களை பகிரங்கமாக காட்சிப்படுத்துதல் அல்லது பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ராஜ்குந்த்ரா மும்பை குற்றப்பிரிவுக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார். வெளியான தகவலின்படி, திரைப்பட  நடிகைகளை நிர்வாணமாக நடித்தவைத்து அதனை செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்வது தொடர்பான புகாரில் ஏற்கெனவே 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த படங்கள் பணம் செலுத்தப்பட்டு பார்க்கப்பட்டும் செல்போன் ஆப்களில் வெளியாகின்றன என்கின்றனர் போலீசார்.




ராஜ்குந்த்ரா மீது அடுத்தடுத்து சில குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன. ராஜ்குந்த்ரா தன்னை நிர்வாணமாக ஆடிஷன் செய்ததாக நடிகை சகாரிகா சுமன் அளித்த நேர்காணலும் கவனம் பெற்றது. இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதமே வைரலானது ஆனால் அப்போது அதிகம் கவனம் பெறவில்லை. இப்போது ஆபாசப்படம் விவகாரத்தில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதே வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது.