Just In





புதுக்கோட்டையில் பயங்கரம்... மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்: தடுக்க வந்த மாமியாருக்கு என்ன ஆனது?
தன் மகளை முருகன் வெட்டுவதை கண்டு அலறி அடித்துக்கொண்டு தடுக்கச் சென்ற இந்திராணியின் தாயார் லெட்சுமி (60) என்பவரையும் கையில் வெட்டியுள்ளார்.

புதுக்கோட்டை: குடும்பத் தகராறில் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவர் தடுக்க வந்த மாமியாரையும் வெட்டிய சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே எம்.ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் இந்திராணி ( 37). இவருக்கு திருமணமாகி தவபாலன் (12) என்ற மகன் உள்ளான். இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் பிரிந்து வந்து தந்தையுடன் இந்திராணி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு கடலை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த முருகன் என்பவரோடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திராணிக்கு இரண்டாவதாகத் திருமணம் நடந்துள்ளது.
முருகன் எம்.ராசிமங்கலத்தில் மனைவியோடு தங்கியுள்ளார். இந்நிலையில், இந்த தம்பதியினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதேபோல மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த முருகன் வீட்டிலிருந்த அரிவாளால் இந்திராணியைச் சரமாரியாகத் தலை மற்றும் கைகளில் வெட்டியுள்ளார் இதில், படுகாயம் அடைந்த இந்திராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அப்போது தன் மகளை முருகன் வெட்டுவதை கண்டு அலறி அடித்துக்கொண்டு தடுக்கச் சென்ற இந்திராணியின் தாயார் லெட்சுமி (60) என்பவரையும் கையில் வெட்டியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்து அங்குச் சென்ற ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி கலையரசன் தலைமையிலான போலீஸார் இந்திராணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனையாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் முருகனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.