புதுச்சேரி: மகனை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்துள்ளதாகவும், அவரை விடுவிக்க 75 ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும் என கூறி மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, அண்ணா சாலையை சேர்ந்த பெண் ஒருவரை, தொடர்பு கொண்ட மர்ம நபர் போலீஸ் அதிகாரி போல் பேசி, உங்களது மகனை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்துள்ளதாகவும், அவரை விடுவிக்க 75 ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய அப்பெண் மர்ம நபருக்கு 62 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். லாஸ்பேட்டையைச் சேர்ந்த நபர், ராமேஸ்வரத்தில் தங்குவதற்கு ஆன்லைனில் ஓட்டல் குறித்த விவரங்களை தேடியுள்ளார்.

அப்போது, அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், அறை முன்பதிவிற்கு பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதை நம்பிய அவர், 11 ஆயிரத்து 260 ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதுபோல், பாகூரைச் சேர்ந்த பெண் 91 ஆயிரத்து 100, முத்தியால்பேட்டை சேர்ந்த நபர் 8 ஆயிரத்து 598, அரியாங்குப்பத்தை சேர்ந்த நபர் 72 ஆயிரத்து 500, ரெயின்போ நகரை சேர்ந்த நபர் 7 ஆயிரத்து 840, சாரத்தை சேர்ந்த பெண் 9 ஆயிரத்து 500, லாஸ்பேட்டை நபர் 4 ஆயிரத்து 800, மதகடிப்பட்டு நபர் 16 ஆயிரத்து 200, லாஸ்பேட்டை நபர் 28 ஆயிரத்து468 என, மொத்தம் 10 பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 12ஆயிரத்து 266 ரூபாய் ஏமாந்துள்ளார். இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று, தனியார் வங்கியின் பெயரில் பரிசு விழுந்துள்ளதாக கூறி போலி வங்கி செயலியை பதிவிறக்கம் செய்த நபர் ரூ.1.23 லட்சம் மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.

சுல்தான்பேட் பகுதியைச் சேர்ந்த ஆண் நபரின், வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, தனியார் வங்கியின் பெயரில் பரிசு விழுந்துள்ளதாக கூறி போலி மொபைல் செயலி வந்துள்ளது. அதனை நம்பி, அந்த செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, தனது வங்கியின் விவரங்களை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்து ஏமாற்றியுள்ளார்.

ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம்

அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு மர்ம நபர், வீட்டிலிருந்த படி ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய மர்மநபர் தெரிவித்த ஆன்லைனில் பல்வேறு தவணைகளாக 90 ஆயிரத்து 500 ரூபாய் முதலீடு செய்து, கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து வந்துள்ளார். அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

கவுண்டம்பாளையத்தை ஆண் நபர் ஒருவர், ஆன்லைனில் இந்தியா விமான நிலையங்களில் வேலை வாய்ப்பு தொடர்பாக விளம்பரத்தை பார்த்து உள்ளார். அந்த விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, எதிர்முனையில் பேசிய நபர், தன்னை இந்திய விமான நிலைய ஆணையத்தின் நிர்வாகி போல், அறிமுகப் படுத்தி கொண்டுள்ளார். அதில், தங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும், அதற்கான விண்ணப்பம் மற்றும் செயலாக்க கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை நம்பி மர்ம நபருக்கு 16 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பி இழந்துள்ளார். இதுபோல் மூன்று பேர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஏமாந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.