புதுச்சேரி மேட்ரிமோனியில் அறிமுகமான பெண் திருமணம் செய்து கொள்வதாக கூறி புதுச்சேரி மருத்துவரிடம் ரூ.34½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதுச்சேரி தோட்டக்கால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலாஜி (வயது 36). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்தவமனையில்  மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணாகிவிட்டது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து பாலாஜி தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக பாலாஜியின் தகவல்களை 'மேட்ரிமோனி'யில் பதிவேற்றம் செய்தனர். தொடர்ந்து பாலாஜியின் செல்போன் எண்ணுக்கு பல பெண்களிடம் இருந்து குறுந்தகவல் (மெசேஜ்) வரத்தொடங்கியது. அப்போது அவருக்கு "சோமஸ்ரீ நாயக்" என்ற ஒரு பெண் அறிமுகமானார். அவர் தான் அமெரிக்காவில் மருத்துவருக்கு படித்து முடித்துவிட்டு சிரியா நாட்டில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார். 


அவரது பேச்சில் மயங்கிய பாலாஜி, வாட்ஸ் அப் மூலம் நட்பாக பேச தொடங்கினார். இருவருக்கும் பிடித்து போகவே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இந்த நிலையில் சோமஸ்ரீ தனக்கு பணத்தேவை இருப்பதாக கூறி பாலாஜியிடம் பல்வேறு தவணைகளாக ரூ.34 லட்சத்து 55 ஆயிரத்து 261 வாங்கினார். அதன்பிறகு அவர், சரியாக பாலாஜியிடம் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் சோமஸ்ரீ மீது பாலாஜிக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அவரது டாக்டர் பதிவு எண் (ஐ.டி.) கேட்டார். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார். மேலும் உரையாடுவதையும் நிறுத்திவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலாஜி இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.