புதுச்சேரி காலாப்பட்டு அருகே உள்ள பிள்ளைச்சாவடி பகுதியை  சேர்ந்த மீனவர் சந்திரன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35). இவர் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ராஜகுமாரிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சத்தை வட்டிக்கு கொடுத்தார். அதற்கு அவர் மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ராஜகுமாரி வட்டியை சரியாக கொடுக்கவில்லை என  கலைச்செல்வி பலமுறை கேட்டும், அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.


இதற்கிடையே கலைச்செல்வி குடும்பத்தினருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. எனவே கணவன் மனைவி இருவரும் ஏழுமலையின் வீட்டிற்கு சென்று, கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து ஏழுமலை காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சந்திரன், கலைச்செல்வி ஆகியோரை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் நடந்தது. அப்போது கடன் வாங்கிய ஏழுமலையையும் அவரது மனைவியையும் போலீசார் இருக்கையில் அமர வைத்தும், சந்திரன், கலைச்செல்வியை நிற்க வைத்தும் போலீசார் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.


இதனால் விரக்தி அடைந்த கலைச்செல்வி, காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். காவல் நிலையம் முன் நிறுத்தியிருந்த அவரது இருசக்கர வாகனத்தில் கேனில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் உள்ளே சென்று, தனது பணத்தை தரவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். பேசிக்கொண்டு இருக்கும்போதே திடீரென அவர் கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ குளித்தார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பற்றிக்கொண்டதால் வலி தாக்க முடியாமல் அலறியபடி காவல் நிலையத்தின் உள்ளே ஓடினார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரன் மற்றும் போலீசார் கலைச்செல்வி உடலில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் அவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சுருண்டு கீழே விழுந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கலைச்செல்வி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இதற்கிடையே காலாப்பட்டு போலீசாரை கண்டித்து கலைச்செல்வியின் உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். கலைச்செல்வி தீக்குளித்தபோது பணியில் இருந்த போலீசார் மற்றும் கடன் வாங்கிவிட்டு பணத்தை திரும்ப கொடுக்காமல் இருக்கும் ராஜகுமாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள், உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


இந்த நிலையில் காலாப்பட்டு காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்த விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து டிஜிபி வயர்லெஸ்ஸில் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். 


இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.