புதுச்சேரி: கேரளாவைச் சேர்ந்த அமன் என்ற 22 வயது வாலிபர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்க செயலி ஒன்றில் பெண்களை தேடிய பொழுது, அந்த லோகாண்டோ வெப்சைட்டில் புதுச்சேரியில் உங்களுக்கு இளம்பெண்கள் வேண்டுமென்றால் இந்த நம்பரை தொடர்பு கொள்ளுங்கள் என்று இருந்துள்ளது. அப்போது, அந்த ஆப்பில் கிடைத்த நம்பரை வைத்து ஒரு நபரிடம் பேசிய பொழுது அவர் புதுச்சேரியில் பிரபலமான ஒரு ஓட்டலின் பெயரை சொல்லி அங்கே வரவேண்டும் என்று கூறியுள்ளார்.


அதற்கு முன்னாடியே ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை நீங்கள் நான் சொல்லும் அக்கௌன்ட் அனுப்பினால் 5 அழகிய பெண்களுடைய புகைப்படத்தை அனுப்புவேன் என்று சொல்லி மேற்கண்ட இளைஞர் பணத்தை அனுப்பிய உடன் ஐந்து அழகிய பெண்களின் புகைப்படத்தை அனுப்பி அரை மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் சொன்ன பிரபல தனியார் ஹோட்டலின் வாசலுக்கு சென்று மீண்டும் அவர்களை தொடர்பு கொண்ட போது நீங்கள் நாங்கள் இருக்கும் ஹோட்டலில் வாசலில் நீங்கள் இருப்பதை  நான் பார்த்து விட்டேன். உங்களுக்கு  நீங்கள் தேர்வு செய்த அந்தப் பெண் இந்த ஓட்டலில் 23ஆம் நம்பரில்  தான் இருக்கின்றார்.


மேலும் 11 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி விட்டால் நானே வந்து உங்களை கூப்பிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். உடனே, அதை நம்பிய கேரள வாலிபரும் அவர்கள் சொன்ன வங்கிக் கணக்குக்கு மேலும் 11 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராதால் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக அவர் சைபர் கிரைமில் புகார் கொடுத்தார் அது சம்பந்தமாக இணைய வழி காவல்துறையினர் புகாரை எடுத்து விசாரித்து வருகின்றனர். இது சம்பந்தமாக காவல்துறையினர் பொதுமக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், இதுபோன்று சுற்றுலாத்தலங்களில் இளைஞர்களை ஏமாற்றவே இணையவழி மோசடிக்காரர்கள் இதுபோன்ற செயல்களை அரங்கேற்றி வருகின்றனர் ஆகவே அவர்கள் சொல்வதை நம்பி இது போன்ற பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என காவல் துறை பொதுமக்களை எச்சரிக்கை செய்துள்ளது.


இணையவழி காவல்துறை மீண்டும் மீண்டும் எச்சரிக்கை:


இதுபற்றி இணைய வழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், பெரும்பாலான சமூக வலைதள குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் உறவினர்களால் அல்லது அவர்களுடைய மிக நெருங்கிய நபர்களால் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ எடுக்கும் பொழுதோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது  எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தி உள்ளார்.


புதியதாக துவக்கப்பட்ட இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் உள்ள பல்வேறு விலை உயர்ந்த புதிய மென்பொருள்கள் (new upgraded software) மூலம் இது போன்ற அனைத்து விதமான குற்றங்கள் செய்தவர்களை கண்டுபிடித்து விட முடியும், மேலும் இது போன்ற குற்றங்கள் அனைத்துமே ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாக இருப்பதால், தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தப்ப முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும், இணைய வழியில் வருகின்ற எந்த விளம்பரத்தையும் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம் வேலைவாய்ப்பிற்கு பணம் செலுத்த வேண்டாம். முக்கியமாக சந்தை மதிப்பில் இருக்கின்ற பொருட்களை சந்தை மதிப்பை விட மிகவும் விலை குறைவாக கொடுப்பதாக வருகின்ற விளம்பரங்களை நம்பி, பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். பல்வேறு முக்கிய நிறுவனங்களின் பெயர்களில் படிப்பு வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு 100 ரூபாய் அல்லது 500 ரூபாய் பணம் செலுத்தி எங்களுடைய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அனுப்புங்கள் என்றெல்லாம் நிறைய விளம்பரங்கள் இணைய வழியில் வந்து கொண்டிருக்கிறது. அது போல் எதையும் நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை செய்கிறார்.