புதுச்சேரி அருகே அரங்கனூரை அடுத்த தமிழக பகுதியான கீழ்குமார மங்கலம் காளி கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தமிழரசன் (வயது32). இவர் பிளம்பிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 18ம் தேதி இரவு தமிழரசன் வீட்டில் இருந்தார். அப்போது 3 பேர் தமிழரசனை இருசக்கர வாகனத்தில் வலுகட்டாயமாக அழைத்து சென்றனர். அதன்பிறகு வெகு நேரமாகியும் தமிழரசன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் தமிழரசனின் செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது அவரது செல்போனை வேறு நபர் எடுத்து பேசினார். தமிழரசன் அதிக குடிபோதையில் இருப்பதாகவும், போதை தெளிந்த பின்னர் வீட்டுக்கு வருவார் என்று தெரிவித்தார். ஆனால் அதன்பிறகும் பல நேரம் கழித்தும் தமிழரசன் வீடு திரும்பதால் மீண்டும் அவரது செல்போனில் பெற்றோர் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.


இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் சென்று தமிழரசனை தேடினர். ஆனால் தமிழரசன் எங்கும் இல்லாததால் வீடு திரும்பினர். இந்த நிலையில் புதுவை பகுதியான அரங்கனூர் சுடுகாட்டு பகுதியில் இன்று காலை தமிழரசன் முகத்தில் படுகாயத்துடன் பிணமாக கிடந்தார். அவ்வழியாக சென்ற விவசாயிகள் இதனை பார்த்து தமிழரசனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் தமிழரசனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.


மேலும் தகவல் அறிந்த புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், பாகூர் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தமிழரசனை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்தும், முகத்தில் சரமாரியாக தாக்கியும் கொடூரமாக கொலை செய்திருப்பதை கண்டனர். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் கீழ்குமாரமங்கலம் பகுதியில் 2 பிரிவினர் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளது. இந்த மோதலில் தமிழரசனும் ஈடுபட்டுள்ளார்.


இதுதொடர்பாக வழக்கும் அவர் மீது உள்ளது. எனவே இந்த மோதல் எதிரொலியாக தமிழரசனை எதிர் கோஷ்டியினர் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் விசாரணை நடத்தியதில் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தாடி அய்யனார் (34) தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழரசனை கொலை செய்தது தெரியவந்தது. 


இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது:-


தாடி அய்யனாருடன் தமிழரசன் நண்பராக பழகி வந்தார். இவரது நண்பர் குணா, தாடி அய்யனார் குறித்து பேஸ்புக்கில் தவறாக தகவல் பதிவிட்டுள்ளார். இதுபற்றி அறிந்த தாடி அய்யனார், குணாவை தனது கூட்டாளிகள் மூலம் தனியாக அழைத்து சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை தமிழரசன், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். நண்பருக்கு ஏதாவது நேர்ந்தால், உன்னையும், கூட்டாளிகளையும் சும்மா விடமாட்டேன் என்று தாடி அய்யனாரை போனில் தமிழரசன் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாடி அய்யனார், தனது கூட்டாளியான சிங்கிரிகுடி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பார்த்தசாரதி மூலம் தமிழரசனை அரங்கனூர் சுடுகாடு அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு வரவழைத்தார். அங்கு அவர்கள் மது குடித்தனர்.


அப்போது அங்கு வந்த தாடி அய்யனார், எனக்கே மிரட்டல் விடுவாயா? உன்னை இப்போதே தீர்த்து கட்டுவதாக கூறியுள்ளார். பின்னர் தாடி அய்யனார், தனது கூட்டாளிகள் ஏழுமலை, சந்தோஷ், அர்ஜூன், ஆனந்து, விக்கி, வேல்முருகன், சுந்தர் ஆகியோருடன் சேர்ந்து தமிழரசனை கையால் அடித்தும், காலால் எட்டி உதைத்தும் தாக்கினர். இதில் மார்பு எலும்பு முறிந்து சம்பவ இடத்திலேயே தமிழரசன் துடிதுடித்து இறந்துபோனாதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தாடி அய்யனார் மீது 4 கொலை வழக்குகள் மற்றும் அடிதடி, வெடிகுண்டு வீச்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. கைதான 9 பேரையும் நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.