புதுச்சேரி அபிஷேகபாக்கம் பகுதியை சேர்ந்தவர் கனிமொழி (32). இவரது கணவர் பிரணவ். கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்ற  இவர் தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார். மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூவரும் அபிஷேகப்பாக்கம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.


கனிமொழியின் இரண்டாவது மகள் ஸ்ரீமதி (12). இந்நிலையில்,  நேற்று மதியம் உணவு நேரத்தில் நெயில் பாலிஷை குடித்துள்ளார். இதனை பார்த்த பள்ளி ஊழியர்கள் ஸ்ரீமதியை அருகே இருந்த ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்ற போது அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைகாக  புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இது குறித்து, தகவல் அறிந்து வந்த தவளகுப்பம் போலீசார் மாணவி இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நேற்று காலை தனது  அக்கா உடன் ஸ்ரீமதி சண்டையிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது தாய் மாணவியை கண்டித்துள்ளார், இதில் ஸ்ரீமதி காலை முதலே பள்ளியில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்த நிலையில், மதியம் உணவு நேரத்தில் நெயில் பாலிஷ் அருந்தி தற்கொலை  முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதனை தொடர்ந்து மாணவியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகள் மற்றும் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.





மாநில உதவிமையம் : 104




சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050